Reviews for 18வது அட்சக்கோடு-1

30 reviews total

user_6386

★ 5/5 Feb 02, 2026

ஹைதராபாத் மற்றும் சிகந்தராபாத் நகரின் தெருக்களிலும் லான்ஸ் பாரக் குடியிருப்புகளிலும் சுற்றித் திரிந்த சந்திரசேகரனுடன் உலா வந்ததைப் போன்ற ஓர் பிரமை நாவல் முழுக்கப் பரவி வந்து என்னைக் கட்டிப்போட்டுவிட்டது.

வரலாறு தன் பக்கங்களை நிரப்பிக்கொள்கையில் அதைப்பற்றிய பிரக்ஞை சிறிதும் இன்றி உலவித் திரியும் சந்திரசேகரனில் நான் என்னை உணர்கிறேன்.

user_6385

★ 4/5 Feb 02, 2026

இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஹைதராபாத் சமஸ்தானத்தில் வாழும் சந்திரசேகரன் என்கிற இந்து இளைஞனின் வாழ்வனுபவமே இந்த நாவல். கதாபாத்திரங்கள் வாழும் இடம், கிரிக்கெட் விளையாடும் பகுதி, மார்க்கெட், தியேட்டர், கல்லூரி மற்றும் அங்கு வாழும் பலதரப்பட்ட மனிதர்களைப் பற்றி மிகத் தெளிவாக விவரித்திருக்கிறார்.

பல இடங்களில் எழுத்தாளர் நம்மைச் சிரிக்க வைக்கிறார். கடலை எண்ணெயில் இயங்கும் பேரூந்துகள், பிச்சைக்காரன் அரிசி விற்பது போன்ற செய்திகள் ஆச்சரியமூட்டுபவையாக இருந்தன. ஒரு பகுதியில் அரசியல், சமூகச் சூழல் மாறும்போது அதுவரை ஒற்றுமையாக அருகருகே வாழ்ந்த மனிதர்களும் கூட மாறிப்போகிறார்கள்.

சாதி, மதம், இனம் என எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் சாமானியர்களே அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் — ஏனெனில் அவர்களே தொடக்கூடிய தூரத்தில் இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் இது எதுவுமே பிரச்சனையாக இருப்பதில்லை. இந்திய வரலாற்றைப் பற்றி அறிய விரும்புகிறவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_6384

★ 5/5 Feb 02, 2026

அதன் உள்ளடக்கத்திற்காகவும், எழுத்து நடைக்காகவும் ஒவ்வொருவராலும் கட்டாயமாக வாசிக்கப்பட வேண்டிய புத்தகமாக 18வது அட்சக்கோடு ஆகிவிடுகிறது. அசோகமித்திரனின் தனித்துவமான எழுத்துநடையும், வரலாற்றுப் பின்னணியின் ஆழமும் இந்நாவலைத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாக்குகின்றன.

user_6383

★ 5/5 Feb 02, 2026

இந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பில் வாசித்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்த மாபெரும் எழுத்தாளரை நேர்காணல் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. அசோகமித்திரன், தன் புகழ் இருந்தும், மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் — ஒரு பல்கலைக்கழக மாணவனையும் ஒரு பாடத்திட்ட திட்டத்திற்காக சந்திக்கத் தயாராக இருந்தார்.

அவர் தன் எழுத்து வாழ்க்கையையும் ஒரு முக்கியமான திருப்புமுனையையும் விளக்கினார். இளமையில் வளரும் எழுத்தாளராக இருந்தபோது, அவரது ஆங்கிலப் படைப்புகள் இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி போன்ற பிரபல இதழ்களில் வெளிவந்தன. ஆனால் தன் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார் — ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி பொருளாதார ரீதியில் வளமாக இருப்பதா அல்லது தன் கலாச்சாரத்திற்கு உண்மையாக தமிழில் எழுதுவதா. அவர் தமிழைத் தேர்ந்தெடுத்தார். வரும் தலைமுறையினர் அவரது மரபை வலுவாகவும் நன்றாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

user_6382

★ 4/5 Feb 02, 2026

என்னுடைய எக்காலத்துக்குமான விருப்பமான எழுத்தாளர் என்றால் அது அசோகமித்திரன் தான். சமீப காலங்களில் அவருடைய எழுத்துக்களைப் படிப்பது கடமையாகவே கருதுகிறேன்.

பொதுவாக ஒரு சிறந்த நாவலைப் படித்தால் அதன் வரிகள் காட்சிகளாக நம் மனதில் ஓடும். ஆனால் அசோகமித்திரனின் எழுத்து தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட படங்களின் ஸ்லைடு-ஷோவாக நம் மனதில் நகர்கிறது. அவர் விவரிக்கும் காட்சிகள் உறைந்த படமாகத்தான் இருக்கின்றன — காட்சிக்குத் தேவையானது மட்டுமின்றி அதன் களத்தையும் நம்மால் உள்வாங்க முடிகிறது.

18வது அட்சக்கோடு என்பது கதை நிகழும் இடத்தைக் குறிக்கிறது. சந்திரசேகர் என்ற கதாபாத்திரத்தின் மூலமாக கதை நகர்கிறது. ஹைதராபாத் சமஸ்தானத்தில் சுதந்திரத்திற்கு முன்பும் அதன் பிறகு இந்திய யூனியனுடன் இணைந்தது வரை நிகழ்ந்த வரலாற்றுச் சம்பவங்களை மைய இழையாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. குமரப் பருவத்தில் ஏற்படுகிற மாற்றத்தை எளிதான வார்த்தைகளில், அந்தப் பருவத்திற்கே உரிய குழப்பங்களை விளக்கியுள்ளார். நிஜாம் ஆட்சியில் நடந்த வன்முறைகளையும் குடிப்பெயர்வுகளையும் எந்தவிதமான மிகைப்படுத்துதலும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார்.

பெரும்பாலும் அசோகமித்திரனின் படைப்புகள் முடிவில் எதிர்பாராத திருப்பம் கொண்டதாக இருக்கும் — அதுவரை நாம் கொண்டிருக்கும் மதிப்பீட்டைப் புரட்டிப் போடக்கூடியதாக இருக்கும். இந்த நாவலும் அப்படித்தான். மதமும் ஜாதியும் கலவரத்திற்கு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் யாரிடம் அதிகாரம் உள்ளதோ அவர்களே வன்முறையை நிகழ்த்துபவர்கள் என்பதை இறுதிப் பத்தியில் சொல்லாமல் சொல்கிறார்.

user_6381

★ 4/5 Feb 02, 2026

18வது அட்சக்கோடு என்பது ஹைதராபாத் செக்கந்தராபாத் ஊடே வெட்டிச் செல்லும் அகலாங்கு கோடுகள் ஆகும். கதை நடக்கும் காலம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து சுதந்திரம் அடைந்த சில காலம் வரை செல்கிறது.

இந்துக்கள் முஸ்லிம்கள் என்பதைச் சுற்றி இயங்கும் இந்தக் கதை, இளமையின் பேதமையில் அலையும் ஒருவன் எப்படி துவேஷத்தாலும் மனிதாபிமானத்தாலும் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதே கதை. நிலையற்ற உலகில் சில வருடங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவனை எப்படி தலைகீழாக மாற்றிப்போடுகின்றன என்பது கதை.

ஹைதராபாத் நிஜாம் அரசுக்குக் கீழே இருக்கிறது. இந்தியாவின் சுதந்திரத்துக்குப் பின் இந்திய அரசாங்கத்துக்குக் கீழ் அடிபணிய மறுக்கிறது. சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் நிலைமைகள் எவ்வாறு மாறுகின்றன என்பதை இடங்களையும் கதாபாத்திரங்களையும் வைத்துத் தெளிவாகப் புரியவைத்துள்ளார் அசோகமித்திரன்.

கதையின் தொடக்கத்தில் சிறுவயதில் மதம் என்று பிரித்து அறியாத சந்திரசேகரனுக்கு எல்லோருமே முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ நண்பர்களே. வளர வளர நாட்டின் கலாசாரப் பின்னணி துவேஷத்தை மூட்டிவிடுகிறது. காந்தி சுடப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு முஸ்லிம் தான் கொன்றிருப்பானோ என்று நூறு முஸ்லிம்களைக் கொல்லும் வெறிக்கு உள்ளாகிறான். ஒரு நாட்டில் ஊடகம் எவ்வளவு பெரும் பங்கு வகிக்கிறது என்பதை இந்தச் சம்பவம் தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. நாவலின் இறுதிக்கட்டம் வாழ்க்கை முழுவதும் துரத்துவது போல நம்மையும் துரத்தும் என்பதில் ஐயமில்லை.

user_6380

★ 5/5 Feb 02, 2026

கடைசி சில பக்கங்கள் மனதை மரத்துப்போகச் செய்தன. தலைசிறந்த படைப்பு. அசோகமித்திரனின் எழுத்துத் திறனின் உச்சம் இந்நாவலின் இறுதிப் பகுதியில் வெளிப்படுகிறது.

user_6379

★ 4/5 Feb 02, 2026

அந்தக் கால கிளாசிக் நாவல்கள் என்று விதந்தோதப்படும் பெரும்பான்மையான புத்தகங்களுடன் நான் ஒத்துப்போனதில்லை. 18வது அட்சக்கோடு வாசிக்கத் தொடங்கிய போதும் அதே நிலைப்பாடு தான். ஆனால் முடிக்கும் பொழுது என் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டேன்.

ஹைதராபாத் சமஸ்தானம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்த வரலாற்றுப் பின்புலம் ஒரு பிராமண இளைஞனின் பார்வையில் விரிகிறது. வேறுபாடு கருதாது பழகும் கதாநாயகன், அவனைத் தவறான அரசியலுக்குத் தள்ளும் சுற்றுவட்டம், பின் அவன் தெளிவுறும் காலம் என்று கொஞ்சம் பழக்கமான வார்ப்பு தான். பின் எது இந்தப் புத்தகத்தைத் தனித்துவமாக்குகிறது? முதலாம் பகுதிக்குப் பின் நமக்குக் கடத்தப்படும் நாம் அறியாத இணைப்புச் சம்பவங்களும், நாவல் உச்சம் பெறும் அந்த இறுதிப் பகுதியும். ஹைதராபாத்தில் வசித்தவர்களுக்குக் கூடுதல் பிணைப்பை ஏற்படுத்தலாம்.

user_6378

★ 4/5 Feb 02, 2026

சோகமான நிகழ்வுகளையும் நகைச்சுவையாக ரசிக்கக்கூடிய விதத்தில் எழுதியிருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, காந்தி சுடப்பட்டு இறந்துவிட்டார் என்று தகவல் கிடைக்கிறது. கதாபாத்திரங்களில் ஒருவரான சந்திரசேகர் இப்படி யோசிக்கிறார் — செத்தவர்கள் எல்லோரும் பிசாசாகி விடுவார்கள் என்றால் மகாத்மா காந்தியும் பிசாசாகி விடுவாரா? நவீன புனைவிலக்கியத்தின் சிறந்த படைப்பு இப்புத்தகம்.

user_6377

★ 5/5 Feb 02, 2026

தற்போதைய சூழ்நிலையில் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நாவல். இன்று வரைக்கும் இந்துத்துவ அரசு எப்படி சிறுபான்மையினர் மேல் வெறுப்பை உமிழ்கிறதோ, அதுபோன்று சுதந்திரத்திற்கு முன்பு ஹைதராபாத் நிஜாம் அரசு நிகழ்த்திய சர்வாதிகாரத்தின் கீழ் வாழ்ந்த இந்துக்கள் எவ்வாறு ஒரு இஸ்லாமிய வெறுப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இறுதித் தருணம் நாவலில் உங்கள் மனதை சுக்குநூறாக உடைக்கும்.