Reviews for தேசாந்திரி-1
37 reviews total
user_5871
★ 5/5 Feb 02, 2026தமிழில் வந்த பயண நூல்களில் தலைசிறந்த படைப்பு. இந்தியாவைச் சுற்றிப் பயணிக்க இது அரிய வழிகாட்டி.
user_5870
★ 5/5 Feb 02, 2026அருமையான புத்தகம்! ஆசிரியரின் எழுத்து நடை என் இளமைப் பிராயத்தை நினைவு கூற வைத்தது. சென்ற ஊர்களைப் பற்றி மட்டுமல்லாமல் ஆசிரியரின் மனநிலையையும் காட்டும் புத்தகம். அந்த இடங்களுக்கு நானும் செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது.
user_5869
★ 5/5 Feb 02, 2026எஸ்.ரா தன் பயண அனுபவங்களைக் கட்டுரைத் தொகுப்பாக கொடுத்துள்ளார். முழுவதும் இந்தியப் பயணங்கள், பெரும்பாலும் தமிழ்நாட்டுப் பயணங்கள்.
இந்தியாவை அறிந்துகொள்ள வரைபடம் மட்டும் போதாது, நாடு நெடுகிலும் பயணம் செய்ய வேண்டும் என்கிறார் எஸ்.ரா. உட்கார்ந்த இடத்திலிருந்தே இந்தியாவைச் சுற்றிய உணர்வை தேசாந்திரி மூலம் பெற்றேன்.
ராமானுஜரை ஏன் கண்டுகொள்ளவில்லை, பழமையான ஓவியங்களை ஏன் பாதுகாக்கத் தவறுகிறோம், வரலாறு ஏன் பள்ளிப் பாடப்புத்தகங்களில் சுருங்கியுள்ளது — எனப் பல கேள்விகளை எழச் செய்கிறார் எஸ்.ரா.
user_5868
★ 4/5 Feb 02, 2026படிப்பும் பயணமுமே ஒரு மனிதனை முழுமையாக்கும்! நான் படிக்கும் எஸ்.ராவின் முதல் புத்தகம். இந்தியப் பயண அனுபவங்களைக் கட்டுரைத் தொகுப்பாக விவரித்திருக்கும் இக்கட்டுரைகளில் சில குழந்தைப் பருவத்திற்கு இட்டுச்செல்கின்றன, சில நம் கன்னத்தில் அறைகின்றன.
கண்கள் நமக்குக் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். நம்மில் பெரும்பாலானோர் செல்போன் கேமரா வழியாகத்தான் உலகைப் பார்க்கின்றனர். ஒரு பொருள் நூறு ஆண்டுகள் பழமையானாலே பொக்கிஷமாகப் பேணும் நாடுகள் இருக்க, ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுவரோவியங்களை சிதிலமடையவிட்டது நாம் வருங்கால சந்ததியினருக்குச் செய்த துரோகம்!
user_5867
★ 5/5 Feb 02, 2026பயணங்கள் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை. இரண்டு வருடங்களாகப் புத்தக அறையில் இருந்த இந்நூலை இப்போதுதான் எடுத்துப் படித்தேன்.
சாதாரண பயணக் குறிப்பு மட்டுமல்ல — வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்களையும் சேர்த்துச் சொல்கிறார் எஸ்.ரா. வீட்டின் ஜன்னல் வழியாக உலகைப் பார்க்க ஆரம்பித்ததை எழுதும் அவர், எல்லா பயணங்களும் முடிவது நம் வீட்டை நோக்கி என்று முடிப்பது அழகு.
சிறு விஷயங்களிலும் சந்தோஷம் காணலாம், கண்டம் விட்டுக் கண்டம் சுற்ற அவசியமில்லை என்ற உண்மையை அருமையாகச் சொல்கிறார். சரஸ்வதி மஹால், கங்கை கொண்ட சோழபுரம், காசி, பரங்கிமலை — அவர் சொல்லிதான் பல இடங்களின் பெருமையை அறிகிறேன். தனிமை விரும்பியான எனக்கு இது ஒரு சிறந்த புத்தகம்.
user_5866
★ 5/5 Feb 02, 2026புத்தகங்களைப் போலவே மனிதனைப் பக்குவப்படுத்துபவை பயணங்கள். இந்நூலில் எஸ்.ரா தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். சாதாரண பயண நூல் என்று நினைத்தேன், ஆனால் ஒவ்வொரு கட்டுரையிலும் நம்மை நோக்கி அவர் கேட்கும் கேள்விகள் முகத்தில் அறைகின்றன.
அனைத்தும் இந்தியப் பயணங்கள், பெரும்பாலும் தமிழகப் பயணங்கள். தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் இவ்வளவு உள்ளதா என ஆச்சரியம் ஏற்படும். வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற மணியாச்சி ரயில் நிலையத்தைக் கடந்து சென்றிருக்கிறேன், ஆனால் அந்நிகழ்வு நினைவுக்கு வரவில்லை — எஸ்.ரா அந்த நினைவிடத்திற்கே சென்கிறார்!
புராதன இடங்கள், கோட்டைகள், கோயில்கள், மலைகள், ஆறுகள் நம்மைச் சுற்றி உள்ளன — ஆனால் நாம் மதிப்பதில்லை. மறைந்த கவிஞர்களைக் கொண்டாடும் நம்மில் எத்தனை பேர் அவர்கள் வாழ்ந்த இடத்திற்குச் சென்றிருக்கிறோம்? பயணம் பற்றிய நமது பார்வையை மாற்றுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
user_5865
★ 5/5 Feb 02, 2026தேடலின் பயணங்களில் பரந்தது இவ்வுலகம். பயணங்களின் தேடலில் விரிந்தது நம் வாழ்வு. சாதாரண மனிதனுக்கு சிறகு விரிக்கப் பழக்கிக்கொடுத்தது இந்தப் பயணப்படுதல்.
எஸ்.இராமகிருஷ்ணன் தனது இலக்கற்ற பயணங்களின் அனுபவங்களை கட்டுரைகளாக கண்முன் காட்டுகிறார். ஜன்னல் தாண்டிய சூரிய ஒளியில் தொடங்கி, சிறுவயதில் கேட்ட கதைகள், கோயில் சிற்பங்கள், ஒளிந்திருக்கும் ஓவியங்கள், பறவைகள், மலைகள், மேகங்கள், மழை, கடற்கரையில் ஒதுங்கும் கிளிஞ்சல்கள் என நீள்கிறது அவரின் பயணக் கட்டுரைகள்.
பயணம் என்பது தூரத்தில் அல்ல, அனுபவத்தில்தான். பயணப்படுங்கள், இயற்கையுடன் இணையுங்கள், வாழ்க்கை வாழ்வதற்கே.
user_5864
★ 4/5 Feb 02, 2026நான் வாசிக்கும் முதல் எஸ்.ராவின் படைப்பு தேசாந்திரி. வெறும் பயண அனுபவத் தொகுப்பு என்று நினைத்தது முதல் கட்டுரையிலேயே தவறு என்று புரிந்துவிட்டது. இது அவரின் எண்ணச்சிதறல்களின் குவிப்பு. ரசித்து ருசித்து படிக்க வேண்டியது.
என் சொந்த ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர் என்பதாலோ என்னவோ, அவர் அனுபவித்த பல விஷயங்களை என்னால் பொருத்திப் பார்க்க முடிகிறது. அவர் சென்ற பல இடங்களுக்கு நானும் சென்றிருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். எஸ்.ராவின் படைப்புகளை கண்டிப்பாகத் தேடிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
user_5863
★ 5/5 Feb 02, 2026நீண்ட காலமாக படிக்க வேண்டும் என்ற பட்டியலில் இருந்த புத்தகம். தலைப்பும், ஆசிரியர் ஒரு நேர்காணலில் தான் எப்படிப் பயணம் செய்வார் என்று சொன்னதும் கவர்ந்தது — ஒரு பேருந்தில் ஏறி கடைசி நிறுத்தத்தில் இறங்கி, அடுத்த பேருந்தில் ஏறுவார். அப்படிப் பயணிக்க நானும் விரும்புவேன்.
இந்நூல் ஒரு குறிப்பிட்ட பயணத்தைப் பற்றியது அல்ல, ஆசிரியரின் வாழ்நாள் பயண அனுபவங்களின் தொகுப்பு. என்றாவது ஒரு நாள் நான் புத்தகம் எழுதினால், இது போன்ற ஒரு புத்தகமாக இருக்கும்.
user_5862
★ 4/5 Feb 02, 2026272 பக்கங்கள் — படித்து முடிக்க இரண்டு வாரம் ஆனது. நீண்ட நாள் தேடி கிடைத்த புத்தகம். எஸ்.ராவின் "சிறிது வெளிச்சம்" போல ஒரே நாளில் படித்து முடிக்க முடியவில்லை. தினமும் 20-30 பக்கங்கள் படித்தேன். பயண அனுபவங்கள், மனநிலை, சந்தித்த மனிதர்கள், உதவிகள் என்று செல்கிறது இந்நூல்.
"என்ன வளம் இல்லை இந்த நாட்டில்... ஏன் கையை ஏந்த வேண்டும் அயல் நாட்டில்?" — இந்தப் பாடல் வரிதான் படிக்கும்போது நினைவுக்கு வந்தது. நம்மைச் சுற்றி ஆயிரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன, ஆனால் நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்ற ஆசிரியரின் கேள்வி நியாயமானது.
தஞ்சையில் பிறந்து வளர்ந்தும் கங்கை கொண்ட சோழபுரத்தைப் பார்க்கவில்லை. வீரபாண்டியனை தூக்கிலிட்ட இடம், காந்தியின் தண்டி யாத்திரை நடந்த இடம், மரங்கள் கற்களாய் மாறிய திருவக்கரை — இவையெல்லாம் அரிய தகவல்கள். சரித்திரத்தை வெறும் தேர்வுப் பாடமாக மட்டுமே பார்க்கும் மனநிலை மாறும் வரை இதுபோல்தான் நடக்கும்.
ஒவ்வொரு கட்டுரையும் அழகிய கவிதையுடன் தொடங்குகிறது. இந்தப் புத்தகத்தால் சுற்றுலா பட்டியலில் நிறைய புதிய இடங்கள் சேர்ந்துகொண்டன.