Reviews for அறியப்படாத தமிழகம்

30 reviews total

user_5553

★ 5/5 Feb 02, 2026

நாம் வழிவழியாய் பின்பற்றிவரும் கலாச்சாரத்தின் வரலாற்றை அழகாக விவரிக்கும் நூல். ஒவ்வொரு பழக்கவழக்கத்தின் பின்னணியிலும் ஒரு சுவாரசியமான வரலாறு ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

user_5552

★ 5/5 Feb 02, 2026

தமிழ்க் கலாச்சாரத்தை அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம். நம் பண்பாட்டின் ஆழமான வேர்களை இந்நூல் அழகாக வெளிச்சமிடுகிறது.

user_5551

★ 5/5 Feb 02, 2026

இந்நூல் அற்புதமான வாசிப்பனுபவத்தைத் தந்தது. ஆசிரியரின் கவனிப்பும் ஆராய்ச்சியும் பிரமிக்கத்தக்கவை. இதைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். பல மதங்களும் மொழிகளும் தாக்கம் செலுத்த முயன்றபோதும், தமிழ் நூற்றாண்டுகளாக தன் அடையாளத்தைத் தக்கவைத்துள்ளது என்பதைப் புரிந்துகொள்ள இந்நூலைப் படிக்க வேண்டும்.

user_5550

★ 5/5 Feb 02, 2026

தொ.பரமசிவன் பழந்தமிழ்ச் சொற்களின் தோற்றம், பண்பாடு மற்றும் அதன் மறுமலர்ச்சி குறித்து ஆழமான ஆராய்ச்சி செய்துள்ளார். ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும்போது வரலாற்றின் பல விவரங்களை அவர் வெளிக்கொணரும் விதம் வியப்பூட்டுகிறது. வீட்டில் ஒரு பிரதி வைத்திருக்க வேண்டிய சிறந்த நூல்.

user_5549

★ 5/5 Feb 02, 2026

நான் இதுவரை அறிந்திராத என் தமிழகத்தைப் பற்றி நிறையத் தகவல்கள் அறிவதற்கு தொ.பரமசிவனின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு பெரும் உதவியாக இருந்தது. முதல் கட்டுரையே "தமிழ்" தான் — மொழி இல்லாமல் ஒரு நாட்டின் பண்பாடே இல்லை என்பதற்காக இதை முதலாம் கட்டுரையாக வைத்திருக்கலாம்.

தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்ற பொருள் கூறி, அது தமிழக அரசியல், சமூக பண்பாட்டு வளர்ச்சியில் எப்படி வலிமையான சொல்லாக அமைந்தது என்பதை அறியமுடியும். தமிழர்கள் தண்ணீரை எவ்வளவு முதன்மையாகக் கருதுகிறார்கள் என்பதை நாம் செய்யும் சடங்குகளை உற்றுக் கவனித்தால் தெரியும்.

தமிழர்களின் உணவுப் பழக்கம், சமையல் முறை, விஜயநகர ஆட்சியால் ஏற்பட்ட உணவு மாற்றங்கள் ஆகிய தகவல்கள் சுவாரசியமானவை. salary என்ற ஆங்கிலச் சொல் salt என்ற சொல்லிலிருந்து வந்தது என்பதன் விளக்கம் அருமை.

"வீடும் வாழ்வும்" தலைப்பில் வீடு கட்டுவதில் இருந்த சமூக ஏற்றத்தாழ்வுகள், மறைந்துபோன உறவுப்பெயர்கள், சங்ககாலத்தில் குழந்தைகளுக்கு இட்ட அழகான தமிழ்ப் பெயர்கள் ஆகியவை விவரிக்கப்படுகின்றன.

பக்தி இயக்கங்கள் எழுவதற்கு முன் கொண்டாடப்பட்ட திருவிழாக்களை சைவமும் வைணவமும் தன்வயமாக்கிக் கொண்ட விதம், தமிழர்களுக்கு "Festival of lights" என்பது தீபாவளி அல்ல திருக்கார்த்திகையே என்பது, பல்லாங்குழி விளையாட்டில் தனிச் சொத்துரிமையை நியாயப்படுத்தும் பண்பாட்டு அம்சம் — அனைத்தும் வியப்பூட்டுகின்றன.

தமிழகப் பௌத்தம் குறித்த கட்டுரையில் "கல்லூரி", "மாணாக்கன்" போன்ற சொற்கள் சமண மதத்தினால் வந்தது என்பதும், தமிழ்நாட்டில் பெண் கல்வியை வளர்த்தது சமணம் என்பதும் ஆச்சரியப்படத்தக்க செய்திகள். தமிழ்ப் பண்பாட்டில் ஆர்வம் உள்ள அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நூல்.

user_5548

★ 3/5 Feb 02, 2026

அறியப்படாத தமிழகம் உண்மையிலேயே அறியப்படாத விஷயங்களைத் தான் சொல்லியிருக்கிறது. ஆசிரியர் பழைய பழக்கவழக்கங்களுக்கான காரணங்களை பல இடங்களில் நமக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம்.

user_5547

★ 5/5 Feb 02, 2026

தமிழ்நாட்டைப் பற்றி, குறிப்பாக தென் தமிழகத்தைப் பற்றி மேலும் அறிய விரும்புவோர் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது. அறியப்படாத தகவல்கள் நிறைந்த அற்புதமான கட்டுரைத் தொகுப்பு.

user_5546

Feb 02, 2026

நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத செய்தியை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எவ்வாறு படிவம் படிவமாகப் படிந்துள்ளன என்பதை ஒவ்வொரு கட்டுரையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

உப்பு, எண்ணெய், தேங்காய், வழிபாடு, விழாக்கள், உடை, உறவுமுறை, உறவுப்பெயர்கள் என அன்றாட வாழ்வின் பகட்டில்லாத பல்வேறு கூறுகளைக்கொண்டு வரலாற்று அசைவியக்கம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பெறுகிறது.

user_5545

★ 4/5 Feb 02, 2026

நம் பண்பாட்டையும் பழமையையும் வரலாற்றையும் நேர்த்தியாக எடுத்துரைக்கும் கட்டுரைத் தொகுப்பு இது. நம் மொழி, வீடு கட்டும் முறை, வாழ்க்கை, பண்டிகைகள், விளையாட்டுக்கள், மதங்கள் என இன்று நாம் காணும் மற்றும் மறந்துகொண்டிருக்கும் வரலாற்றுப் பின்னணிகளைக் கூறுகிறது.

"இதற்கு பின்னால் இப்படி ஒன்று இருக்கிறதா?" என்று பக்கத்திற்குப் பக்கம் ஆச்சரியப்படுமளவுக்கு தெரிந்துகொள்ள நிறையவே இருக்கிறது. முதல் நாற்பது பக்கங்கள் சற்று மெதுவாக நகர்ந்தாலும் மீதி பக்கங்கள் கவனத்தை வெகுவாக ஈர்க்கும்.

நம் வரலாற்றைத் தெரிந்துகொண்டு "தமிழன்" எனப் பெருமையாகச் சொன்னால் அது கூடுதல் அழகு தானே!

user_5544

★ 5/5 Feb 02, 2026

ஒரு பொருட்டாக மதிக்கப்படாத, நாம் கருதாத செய்திகளை எடுத்துக்கொண்டு அதில் வரலாறும் பண்பாடும் எப்படி பொதிந்துள்ளன என்று தெளிவாக விளக்கி இந்நூலை உருவாக்கியிருக்கிறார் தொ.பரமசிவன்.

உப்பிலிருந்து உணவு முறை, எண்ணெய், தேங்காய் வந்த வரலாறு, சிறு-பெரு தெய்வ வழிபாடுகள், விழாக்கள், உடைகள், நீர்நிலைகளின் பெயர்கள், உறவுமுறை, உறவுப்பெயர்கள், பருத்தியும் நெசவும் வந்த முறை, மஞ்சள் உபயோகம், பிச்சை எடுப்பது எப்படி உருவெடுத்தது, சமண-பௌத்த மதங்களின் வருகை, பக்தி இயக்கங்கள் அவற்றை பின்னுக்குத் தள்ளி முன்னெழுந்தது, பீட்டர் பாண்டியன், துலுக்க நாச்சியார் என ஏகப்பட்ட தகவல்கள்!

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் பழக்கம் எவ்வாறு சிறுதெய்வ வழிபாட்டோடு இணைந்திருந்தது என்பதற்கான உதாரணங்களாக மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோயில், கருமாத்தூர் மூணு சாமி கோயில், தூத்துக்குடி ஆறுமுகமங்கலம் சுடலைமாடன் கோயில் என ஏராளமான செய்திகளைத் தாங்கி நகர்கிறது புத்தகம்.

நிறைய இடங்கள் கேள்வி கேட்கவும், சில இடங்கள் கேள்விக்குள்ளாக்கவும் செய்கின்றன. நேர்த்தியாகத் தொகுக்கப்பட்ட நூல்.