Reviews for அலை ஓசை
30 reviews total
user_5523
★ 5/5 Feb 02, 2026அமரர் கல்கியின் மற்றுமொரு அரிய படைப்பு. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை எடுத்துரைக்கும் இந்த நூல், பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் கொடுத்த ஈர்ப்பை கொடுக்கவில்லை எனினும், இது அவற்றிலிருந்து மாறுபட்ட படைப்பு என்று எண்ண வேண்டும்.
கதாபாத்திரங்கள் அனைத்தும் மனதில் நீங்கா இடம் பெற்றன. காதல் சம்பாஷணைகளை எடுத்துரைப்பதில் கல்கிக்கு நிகர் கல்கியே. ஒரு கதாபாத்திரத்தின் மனநிலையை வாசிப்பவர்களின் மனதில் உணரச் செய்வது கல்கியின் உச்சம்.
இதுவரை காந்தியடிகளைக் குறித்து பெரிய ஈர்ப்பு உருவாகவில்லை, ஆனால் இப்புத்தகம் அந்த ஈர்ப்பை உண்டாக்கியது. திருமண வாழ்க்கையின் இன்ப துன்பங்களை எடுத்துரைப்பது மட்டுமின்றி, கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வழிகாட்டியாகவும் அமையும். அவசியம் படிக்க வேண்டிய ஒரு நூல்.
user_5522
★ 4/5 Feb 02, 2026கல்கி சாகித்திய விருது பெறுவதற்குக் காரணமான படைப்பு அலை ஓசை. கல்கியே பெருமையுடன் தன்னுடைய உன்னதமான படைப்பு என்று கருதும் நாவல். ஆகவே அலை ஓசையை விமர்சனம் செய்வது எளிதல்ல.
கணக்கில் அடக்கமுடியாத அளவு கதாபாத்திரங்கள் உள்ளன. சீதாதான் இந்தக் கதையின் முதன்மைக் கதாபாத்திரம் என்றும், சௌந்தரராகவன் கதையின் நாயகன் அல்ல, ஆனால் அந்த இடத்துக்கு சூர்யா பொருந்தக்கூடும் என்பதும் மெதுவாகவே தெரியவரும்.
இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் நடக்கும் 1930-1948 சமயத்தில் நடக்கும் இக்கதை, வாசகர்களைத் தமிழ்நாடு, டெல்லி, ஆக்ரா, கல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான் என பல இடங்களுக்கு இட்டுச்செல்லும். இத்தனை கதாபாத்திரங்களை இணைத்து, அவர்களின் கதைகளையும் கனவுகளையும் பிணைத்து, மனித பலவீனத்தைக் கலந்து, இந்திய சுதந்திரத்தின் பின்னணியில் ஒரு கற்பனைச் சித்திரம் உருவாக்குவது கல்கியைத் தவிர வேறு யாராலும் செய்ய இயலாது.
பொன்னியின் செல்வனோ, சிவகாமியின் சபதமோ அல்ல. இருப்பினும், அந்த சரித்திரப் புனைகதைகளில் காணப்படும் அதே தெள்ளத் தெளிவான எழுத்து நடை அலை ஓசையில் ஒவ்வொரு பக்கத்திலும் பிரதிபலிக்கும்.
user_5521
★ 4/5 Feb 02, 2026கல்கி எழுதிய எல்லா புத்தகங்களுக்கும் பொதுவான ஒன்று, வியக்க வைக்கும் அவரின் விறுவிறுப்பான எழுத்து நடையும் அழகான சொல் பிரயோகமும்தான். இந்த புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல.
ஒரு அக்ரஹாரத்தில் வசிக்கும் மனிதர்களின் வாழ்க்கைக் கதை என்று நினைத்துக்கொண்டு தொடங்கினேன். ஆனால் கதையோ தென் தமிழகத்தில் தொடங்கி வட இந்தியா முழுவதும் பயணிக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் தொடங்கி, சுதந்திரம் கிடைத்த காலகட்டம், இந்தியா பாகிஸ்தான் பிரிவினை வரை என்று கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களின் கதை பூகம்பம், புயல், எரிமலை, பிரளயம் என்று நான்கு பாகங்களாக நீள்கிறது.
சௌந்திரராகவன் கதையின் நாயகன் என்று தொடங்கும் போதே, சூர்யாவை விடவா என்று தோன்றியது. பொன்னியின் செல்வன் வாசித்தபோது அருள்மொழியைவிட வந்தியத்தேவன் நாயகனாகத் தோன்றிய நினைவு வந்தது. உண்மையில் சூர்யாவே கதையின் நாயகனாக வாசித்த அனைவருக்கும் தோன்றும்.
தாரிணியின் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அவளின் பிறப்பின் மர்மம் என்று பல அத்தியாயங்களாக கதை தேவையின்றி நீண்டது சலிப்பைத் தந்தது. ரஜினிபூர் பைத்தியம் கதாபாத்திரம் பொன்னியின் செல்வனின் ஊமை ராணி கதாபாத்திரத்தை நினைவூட்டியது.
இந்திய விடுதலை குறித்த கதையை இக்கதாபாத்திரங்கள் மூலம் கல்கி எழுதியதாகவே தோன்றியது. விடுதலைப் போரில் தென் இந்தியாவின் பங்கு எழுதப்படாதது ஏமாற்றத்தைத் தந்தது. இந்த புத்தகம் 1956-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
user_5520
★ 5/5 Feb 02, 2026கல்கியின் அனைத்துப் படைப்புகளிலும் அவருக்கே மிகவும் பிடித்த நாவல் இது. அந்த அன்பு ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
user_5519
★ 4/5 Feb 02, 2026அலை ஓசை முதல் பாகம் பூகம்பம் — கதை ராஜம்பேட்டைத் தபால் சாவடியில் தொடங்குகிறது. கிட்டாவய்யர், அவரது மனைவி சரஸ்வதி, புதல்வி லலிதா, மகன் சூரியநாராயணன் என முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றன. கிட்டாவய்யரின் இளைய தங்கை ராஜம்மாளின் மகள் சீதா, சௌந்தர ராகவன் என கதை விரிகிறது.
இரண்டாம் பாகம் புயல் — சீதா தன் கணவன் ராகவனைச் சந்திக்க டெல்லிக்குப் பயணிக்கிறாள். அங்கு ராகவனின் முன்னாள் காதலி தாரிணியின் வருகை கதையில் திருப்புமுனையை ஏற்படுத்துகிறது. தாஜ்மஹாலைப் பௌர்ணமியில் பார்க்கச் செல்லும் காட்சியை ஆசிரியர் அழகாக வர்ணித்திருக்கிறார்.
ரஷ்யப் பேகம் என்ற ரமா மணி கதையில் ஒரு திருப்புமுனையாக வருகிறாள். சீதாவுக்கும் அவளுக்கும் உள்ள உறவு, தாரிணியின் மர்மம் என பல கேள்விகள் வாசகரை கல்கியின் வலையில் சிக்க வைக்கின்றன. எழுத்தாளர் நேர்த்தியாகக் கதைக்களத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார்.
user_5518
★ 4/5 Feb 02, 2026கல்கியின் தலைசிறந்த படைப்புகளில் ஒன்று என்று நம்புகிறேன். கல்கியின் கதை ஒருபோதும் முடிவதில்லை, வாழ்க்கையைப் போல் தொடர்ந்து செல்கிறது. மொத்தத்தில் அருமையான வாசிப்பு அனுபவம். குறிப்பாக கடைசி நூறு பக்கங்கள் நாவலின் தொடக்கத்திலிருந்து எழுப்பப்பட்ட அனைத்து முரண்பாடுகளையும் தீர்த்து வைக்கின்றன.
user_5517
★ 5/5 Feb 02, 2026சில இடங்களில் மெதுவாகவும் சில இடங்களில் வேகமாகவும் நகரும் கதை. எல்லா கதாபாத்திரங்களுடனும் நன்றாக இணைந்தேன். என் விருப்பமான கதாபாத்திரம் சூர்யா — வாழ்க்கையை நோக்கிய அவனது அணுகுமுறை, வாழ்வின் மீதான ஆர்வம், மக்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது.
நான் படித்த முதல் தமிழ் நாவல் இது. இன்னும் பல படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது.
user_5516
★ 4/5 Feb 02, 2026மிகவும் சாதாரணக் குடும்பக் கதைதான். கதைகளைச் சொல்லும் விதத்தில்தான் எழுத்தாளன் ஜெயிக்கிறான். மற்றவர்களுக்காக அல்லது வாசகர்களுக்காக இப்படித்தான் கதை அமைய வேண்டும் என்ற முன் யோசனை இல்லாமல் எழுதும் கதைகளே என்றும் நிலைத்து நின்ற கதைகளாக இருக்கின்றன. ஒரு சாதாரணக் கதையை அசாதாரணமாகச் சொல்லும் வலிமை கல்கியைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்பது என்னுடைய ஆழ்ந்த நம்பிக்கை.
user_5515
★ 3/5 Feb 02, 2026பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற அரசர்கள் வரலாற்றை எழுதும் வசதி வலயத்திலிருந்து கல்கி வெளிவந்ததால், பலருக்கு இந்தக் கதை வித்தியாசமாகத் தோன்றலாம். எனினும் இதுவும் கல்கியின் சிறந்த படைப்புகளில் ஒன்று. இந்தியப் பிரிவினையையும் அதன் விளைவுகளையும், அதில் சிக்கிய கதாபாத்திரங்களையும் சித்தரிக்கும் நாவல்.
user_5514
★ 5/5 Feb 02, 2026பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்று நாவல்களை எழுதி வரலாறு படைத்த அமரர் கல்கி, வரலாற்றுக் காலம் முடிந்து சமகால காலம் தொடங்கிய காலத்தில் அலை ஓசை என்ற சமூக நாவலைப் படைத்து வரலாறு படைத்திருக்கிறார்.
இந்நாவலில் வரும் கதாபாத்திரங்கள் தங்களுக்கு நடந்த சம்பவங்களை நம்மிடம் நேரடியாக விவரிக்கும்படி தோன்றுவது ஏன் என்று படிக்கும் போது தெரிந்துகொள்ள இயலவில்லை; படித்து முடித்ததும் தெரிந்துகொண்டேன், காரணம் கல்கி என்று.
படித்து முடித்த பிறகு இக்கதையில் தோன்றிய கதாபாத்திரங்களை விட்டுப் பிரிகிறோமே என்ற எண்ணம் மனதில் அலையடித்துக்கொண்டு செவிகளில் அலை ஓசையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.
பொன்னியின் செல்வனோடோ சிவகாமியின் சபதத்தோடோ அலை ஓசையை ஒப்பிட்டுப் பார்ப்பது நமது அறியாமையை வெளிப்படுத்துகிறது.
தமிழ்க்கடலில் அலையும் சரி, கல்கி படைத்த அலை ஓசையும் சரி, என்றும் ஓயப்போவதில்லை...