Reviews for கருவாச்சி காவியம்

30 reviews total

user_5183

★ 2/5 Feb 02, 2026

ஒரு பெண்ணைச் சுரண்டி, அவள் வாழ்க்கையைத் துன்பமயமாக்கி, அவளிடம் இருப்பதை எல்லாம் பறித்துவிடுங்கள். அவள் உங்களிடமே திரும்பி வருவாள் என்ற செய்தியா இது? கொண்ணவாயனின் கதைக்காக மட்டுமே இரண்டு நட்சத்திரம்.

user_5182

★ 5/5 Feb 02, 2026

துணிச்சலான ஒரு பெண்ணின் அருமையான கதை! கருவாச்சி கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது.

user_5181

★ 4/5 Feb 02, 2026

வாழ்வின் வலிகள் ஒருவரை எப்படியெல்லாம் செம்மைப்படுத்தும் என்பதுதான் கதை. எதிலுமே வெற்றியோ மகிழ்ச்சியோ இல்லாத ஒருத்தியின் வாழ்க்கையில் ஏதாவது நல்லது நடக்குமென்ற ஆவலில் கடைசி வரைக்கும் வாசித்துக் கொண்டு போக, அவள் இதுவரைக்கும் வாழ்ந்ததே அவளுக்கு மிகப்பெரிய வெற்றிதான் என்று கதையை முடிப்பார் ஆசிரியர். மிகச்சிறந்த வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்த கதைக்களம்.

user_5180

★ 3/5 Feb 02, 2026

வாழ்க்கையில எத்தனை சோகம் வந்தாலும், காலம் ஏறி மிதிச்சாலும் மனம் தளராம வாழ்ந்து காட்டிட்டா கருவாச்சி. எத்தனை தூரம், எத்தனை துயரம், எத்தனை பயணம் முள்ளுக்காட்டுப் பாதையில ஒத்தையா நடந்தே வாழ்ந்தா.

ஏசுனவன் ஏறி மிதிச்சவன் எல்லாரையும் விட உயர்ந்து நிக்கிறா. பாக்காத துன்பமில்ல. உறவு இழந்து, பிள்ளைகள் இழந்து, உடமைகள் இழந்து, செயிக்காட்டியும் பரவாயில்ல, தோக்க மாட்டன்னு வாழ்ந்தவ.

அவ செய்ச்சது அவளை ஏறி மிதிச்சவங்களை மட்டும் இல்ல, படிக்கிறவங்க மனசையும் சேர்த்துத்தான். கருவாச்சி ஒரு இரும்பு மனுஷியே!

user_5179

★ 5/5 Feb 02, 2026

சில நாளா ஓய்வு நேரத்தில் பங்கெடுத்து என் நாளில் ஒன்னாகிப் போன கருவாச்சி காவியம் கடைசி பக்கம் வந்தாச்சு. வெள்ளிதிரையில் மண் வாசனை மணந்திருக்கு பாரதிராசா காலத்தில். வெள்ளைக் காகிதத்தில் அதே வாசம் அடிச்சிருக்கு கருவாச்சி காவியத்தில்.

தரிசா இருந்த நிலத்தில் முளைச்ச கருவேல மரமா போனான் கட்டையன் அவ வாழ்க்கையில. ஒண்ணுக்கும் உதவாது கருவேல மரம். ஆனா காஞ்ச முள்ளால் காலைத் தச்சிடும், மேல் வளர்ந்த நிலத்தைப் பொட்டையாக்கிடும். அதுபோலத்தான் அவன் கருவாச்சியையும் அவள் ஒட்டினவங்களையும் பாடாபடுத்திட்டு, தீக்கு இறையாகப் போற வயசுல புத்தி தெளிஞ்சான்.

தாயை மதிக்காத புள்ளை நாசமாத்தான் போகும்னு சொல்லிட்டான் அழகுசிங்கம். தாய் பாசம் முன்னால எந்தத் தவறும் நிற்காது.

நா செயிக்குறனோ இல்லையோ, தோக்க மாட்டன்னு சொன்னா கருவாச்சி. சொல்லச் செயலாக்கிக் காட்டிட்டா. இனி நான் ஆயிரம் புத்தகம் புரட்டலாம். அதெல்லாம் இந்தக் கள்ளிக்காட்டு இளவரசிக்கு ஈடாகுமா தெரியல.

user_5178

★ 5/5 Feb 02, 2026

இந்த நூலின் தலைப்பிலேயே காவியம் எனும் சொல் இடம்பெற்றிருப்பது மிகுந்த பொருத்தமுடையதாகும். கருவாச்சியின் வாழ்க்கை ஒரு காவியத்தின் பரப்பை எடுத்துரைக்கிறது. பிறப்பிலிருந்து முதுமை வரை அவளது ஒவ்வொரு நிலையிலும் ஆழமான படிப்பினைகள் தருகிறது.

கருவாச்சி என்ற பாத்திரம் தனது வாழ்நாளில் சுமந்திருக்கும் துன்பம், துயரம், சோதனைகள் எல்லாம் கூடினாலும், அவற்றைத் தாங்கும் வலிமை அவளிடம் உண்டு. அவள் ஒருபோதும் பிறருக்கு துன்பம் விளைவிப்பதில்லை, மாறாக நன்மையே செய்ய எண்ணும் உயர்ந்த உள்ளமுடையவள்.

கருவாச்சியின் தாய் பெரியமூக்கி இந்தக் கதையின் நெஞ்சை உருக்கும் ஆளுமை. தாய் என்பதன் அர்த்தம் என்ன, தாயின் பாசம் எவ்வளவு தியாகமிகுதியானது என்பதை வாசகர் தெளிவாக உணரச் செய்கிறாள்.

கொன்னவாயன் எனும் கதாபாத்திரம் கிராமத்து வாழ்க்கையின் இயல்பை எளிமையாக வெளிப்படுத்துகிறது. கட்டையன் மற்றும் அவனது தந்தையின் குணவடிவமைப்பு நுணுக்கமாகவும் கோபத்தைத் தூண்டும் வகையிலும் இருக்கிறது.

பேயம்மாள் மிகவும் நுட்பமாக வடிவமைக்கப்பட்ட பாத்திரம். அவளது வாழ்க்கை, ஒரு பெண் எவ்வாறு வாழக்கூடாது என்பதற்கான சான்றாக அமைகிறது.

இந்த நூலின் முழுத் தன்மை, ஒரு கிராமத்தின் வாழ்வோவியத்தை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. இது வெறும் புதினம் அல்ல, ஒரு காவியச் சாட்சியம்.

user_5177

★ 5/5 Feb 02, 2026

முடிவு பழைய தமிழ் திரைப்படத்தை நினைவுபடுத்தினாலும், மன்னிப்பு தாங்க முடியாத தண்டனை என்பதையும் வாழ்ந்து காட்டுவது போன்ற பழிவாங்குதல் கிடையாது என்பதையும் மீண்டும் உணர்த்துகிறது. மனதைக் கனமாக்கும் நல்ல படைப்பு.

மனம் கவர்ந்த வரிகள்: எல்லாக் கடவுளுக்கும் பிள்ளை இருக்கோ இல்லையோ, எல்லாப் பிள்ளைக்கும் கடவுள் இருக்கு ஆத்தா ரூபத்துல. ஒரு மனுசன் கஞ்சப்பயலா இருக்கிறதுனால பணக்காரனாகிறனா? பணத்தக் காப்பாத்த கஞ்சப்பயலாகிறானா?

பொருளு வித்துப் பொழைக்கலாம், புத்தியை வித்துப் பொழைக்கலாம், நேர்மையை வித்துப் பொழைக்கக் கூடாது.

எல்லாரையும் அழிச்சிட்டு ஒரு ஆளு மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது? எல்லாரையும் பொழைக்கவிட்டுத் தானும் பொழைக்கிறதுதானே செயிக்கிறது!

user_5176

★ 5/5 Feb 02, 2026

கிராமமோ நகரமோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தன்னம்பிக்கை போதும் என்று கருவாச்சி மூலம் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறார் வைரமுத்து. ஒற்றை ஆளாக தன்னந்தனியே பிள்ளை பெற்ற பகுதி மிகவும் நெகிழ்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.

user_5175

★ 5/5 Feb 02, 2026

திரைப்படங்களிலும் நாடகத்திலும் நாயகனுக்கோ அல்லது நாயகிக்கோ மட்டும் எப்படி இவ்வளவு சோகம் என்று நினைத்தது உண்டு. ஆனால் கருவாச்சி காவியம் அந்த எண்ணத்தை மாற்றிவிட்டது.

எதை சோகங்கள், எதனை வலிகள். படிக்கும் போதே கண்களில் கண்ணீர். காவியங்கள் என்பது இதிகாசங்களில் உள்ள ஒன்று என்று நினைத்திருந்த எண்ணங்களை இந்த கருவாச்சி காவியம் முற்றிலும் மாற்றிவிட்டது.

கருவாச்சியின் கணவன் திருமணமான ஆறே நாட்களில் அவளை விலக்கி வைக்க வேண்டி கூட்டியிருக்கிற பஞ்சாயத்துக் கூட்டத்தில் தொடங்குகிறது கதை. விலக்கி வைக்கப்பட்ட அவள், அவனால் கர்ப்பமாகி, குழந்தையைப் பெற்றெடுத்து வாழ்க்கையின் ஒவ்வொரு படியிலும் அடிபட்டு, கடைசியில் தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உயிர் வாழ உதவுகிறாள் என்பதுதான் கதை.

ஊர்ப்புறங்களில் நடக்கும் சடங்குகள், அம்மக்களின் நம்பிக்கைகள், அவர்களின் காதல், வைராக்கியம், பழிவாங்கும் உணர்வு, நேசம், இயலாமை, வக்கிரம், உக்கிரம், அறியாமை, வீட்டு வைத்தியம் என்று பல செய்திகளை மிக லாவகமாகச் சொல்கிறார் வைரமுத்து.

கருவாச்சி, கட்டையன், சடையத்தேவர், பெரிய மூக்கி, கொண்ணவாயன், அழகு சிங்கம், சுப்பஞ்செட்டியார், பவளம், கனகம், பூலித்தேவன் என்று பாத்திரங்களை மனதிலேயே அடுக்கி வைத்துவிட்டார் ஆசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒரு சிறப்பம்சம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிராமங்களில் வழக்கத்திலிருக்கும் பல பழைய விஷயங்களைப் புதிதாகச் சொல்கிறார் கவிஞர். கருக்கலைப்பு பற்றி வருகிற ஒரு பகுதி கொஞ்ச நேரம் உறைய வைத்துவிட்டது.

எல்லாரையும் அழிச்சிட்டு ஒரு ஆள் மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது? எல்லாரையும் பொழைக்க விட்டுட்டு தானும் பொழைக்கிறது தான் செயிக்கிறது!

user_5174

★ 1/5 Feb 02, 2026

இந்த நூல் எழுதவே பட்டிருக்கக்கூடாது. ஆணாதிக்கத்திற்கு வலிக்காமல் தடவிக்கொடுக்கும் ஓர் பெண்ணிய பேரிலக்கியம். இப்படி எல்லாம் கஷ்டப்பட்டு, நாயா பேயா அலைஞ்சு திரிஞ்சு சுத்தி இருக்கும் ஆண்களுக்கு எல்லாம் ஆக்கிக்கொட்டி மாண்டு போனால், நீ பெண்ணுள் பெரும்பத்தினி என்று சொல்வது எத்தனை காலத்திற்கு தொடரும்?

இந்த நூலைப் படித்து கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேல் ஆகிறது. கல்லூரி காலத்தில் பகுத்தறிவு பெண்ணியம் என்பதில் அவ்வளவு தெளிவில்லாத காலகட்டம். தமிழில் எதைக் கொடுத்தாலும் படிப்பேன் என்ற மனநிலையில் இருந்த காலத்திலேயே இந்த நூலை முடித்ததும் அடச்சை! நூலா இது! என்றிருந்தது.

கதையில் பெண்ணடிமைத்தனம் மட்டுமே சிக்கல் இல்லை. கதை முடிவில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. கள்ளிக்காட்டு இதிகாசத்தை எங்கே முடிக்க வேண்டும் என்ற தெளிவிருந்தவருக்கு இந்தக் கதையை எங்கே முடிப்பது என்று தெரியவில்லை. இது இதிகாசம் இல்லை, இழுகாசம் என்று தோன்றியது.

கல்லூரி தமிழ் மன்றக் கூட்டத்தில் வேறொருவர் இந்த நூலைப் புகழ்ந்து தள்ளிய போது, அன்றைய இறுதியாண்டு மாணவர் ஒருவர் அது ஒரு அழுவாச்சி காவியம், அதுல விமர்சனம் பண்ண என்ன இருக்கு என்று பதிலடி தந்தார். இந்த நூலைப் பற்றிய ஒரே நன்னினைவு அந்தப் பட்டப்பெயர் மட்டும் தான்.