Reviews for ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

30 reviews total

user_4973

★ 5/5 Feb 02, 2026

எண்ணம்போல் வாழ்வு!

நாம் நல்லது நினைத்தால் எல்லாமே நல்லதாகவே நடக்கும், நம்மைச் சுற்றி இருப்பவர்களும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இந்த நாவல்.

user_4972

★ 4/5 Feb 02, 2026

அருமையான வாசிப்பு அனுபவம் தரும் புத்தகம். எளிமையான நடையில் ஒரு மகத்தான வாழ்வு முறை பற்றி விளக்குகிறார் ஜெயகாந்தன்.

பொதுவாக நாம் யார் என்ற கேள்விக்கு நம் பெற்றோர், ஊர், மதம், சொந்தங்கள் மூலம் விடை அளிப்போம். இதில் ஹென்றி என்பவன் இவை ஏதுமின்றி தான் யார் என்று நிறுவி அனைவரின் அன்பையும் பெறுகிறான்.

படிக்கும்போது இப்படி ஒருவன் இருக்கவே முடியாது என்றுதான் தோன்றும். ஆனால் படித்து முடித்த உடன் நம்மால் ஏன் இப்படி இருக்க முடியவில்லை என்ற கேள்வி எழும் — அதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

user_4971

★ 4/5 Feb 02, 2026

ஹென்றி மட்டுமல்ல, அக்கம்மாள், ஜெயராஜ், தோரைக்கண்ணு, மணியக்காரர், பேபி ஆகிய கதாபாத்திரங்களும் கவனமாகப் படைக்கப்பட்டிருக்கின்றன — அவர்களும் நம் நினைவில் நீண்ட காலம் நிற்பார்கள். ஆழமாகச் சிந்தித்தால், இப்படிப்பட்ட மனிதர்களை நம் அன்றாட வாழ்வில் காணலாம்.

வாழ்க்கையின் பல்வேறு தளங்களைக் கடந்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு புனைவை உருவாக்க முடியும்.

புத்தகத்திலிருந்து சில வரிகள்: "சோப் எங்க அப்பா", "உறவுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம்?", "கூழ் குடிக்கிறது எனக்குப் பிடிக்கும், ஆனால் எனக்குப் பிடிக்கிறது என்பதற்காக இன்னொருவரைக் குடிக்கச் சொல்ல முடியாது."

user_4970

★ 5/5 Feb 02, 2026

புத்தாண்டின் முதல் புத்தகம். நான் வாசிக்கும் முதல் ஜெயகாந்தன் நாவல்.

பெரிய எழுத்தாளர்களின் சமூக நாவல்கள் என்றால் எனக்குப் புரியுமா என்று பயம் உண்டு. மிகவும் குறைந்த விலையில் வாசிப்பாளர்கள் அனைவரும் கொண்டாடும் புத்தகம் என்பதால் வாங்கினேன்.

ஒரு கதையில் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். ஆனால் கதைமாந்தர்கள் முழுவதும் நல்லவர்களாக இருந்தால் போரடிக்க வேண்டும் இல்லையா? அதுதான் இல்லை — கதையை நகர்த்த கெட்டவர்கள் தேவைப்படவில்லை. வெகு இயல்பாக நேர்த்தியாக ரசிக்கும் பாணியில் எழுதியிருக்கிறார்.

அப்பாவிற்கும் பிள்ளைக்கும் நடக்கும் உரையாடல்கள், வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் முறை அனைத்துமே அட்டகாசம். ஹென்றியைப் போல் வாழ்க்கையை வாழக் கற்றுக்கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பொறாமையை விதைக்கிறது.

துரைக்கண்ணு, அக்கம்மா, கிளியாம்பா, மணியக்காரர், தேவராஜன், பிச்சிப் பெண் அனைவருமே கவர்கிறார்கள். கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நாவல்.

user_4969

★ 5/5 Feb 02, 2026

மனதுக்கு நல்ல உணர்வைத் தரும் அருமையான நாவல். படித்து முடிக்கும்போது மனம் லேசாகிறது.

user_4968

★ 5/5 Feb 02, 2026

1973இல் முதற்பதிப்பு கண்ட, பேச்சுவழக்கில் எழுதப்பட்ட நாவல். ஜெயகாந்தனின் கதைமாந்தர்கள் அடித்தட்டு மக்களாக இருந்தாலும், அறிவில் முதிர்ச்சியானவர்களாக உருவாக்கப்படுவர். பேச்சுகளிடையே போகிற போக்கில் மானுட வாழ்வியலுக்கான தத்துவங்களை உதிர்த்துச் செல்லும் குருமார்கள் அவர்கள்.

தத்துவார்த்தங்கள் பொதிந்த உரையாடல்கள் நிகழ்த்தும் கதைமாந்தர்களுடன், உக்கிரமில்லாமல் மென்மையாகச் செல்கிறது கதை. மேகத்தின் மீதமர்ந்து பயணிக்கும் மென்னோட்டத்தில் வாழ்வின் அழகியலை உணர்த்தி ரசிக்கும் அனுபவத்தைத் தருகிறது.

கிருஷ்ணராஜபுரம் என்ற கற்பனை ஊரில் கதை நடக்கிறது. சாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட மனிதனான ஹென்றி இந்த ஊருக்குப் பயணப்படுவதில் தொடங்குகிறது. அவன் வருகிற லாரியில் துரைக்கண்ணு, தேவராஜன் என ஆரம்பித்து, கிராமத்து மக்கள், அவர்களது வாழ்வியல், ஹென்றிக்கும் பப்பாவிற்கும் இடையிலான உரையாடல்கள், புத்திசுவாதீனமற்ற பேபி என பல நிகழ்வுகளைக் கோர்த்து உணர்வுபூர்வமான கதையாக வழங்கியிருக்கிறார் ஜெயகாந்தன்.

உறவுகளுக்குள் பிரச்சனை, சொத்துப் பிணக்கு போன்றவை கதையில் இருந்தாலும், தீயவர் என எவரையும் சுட்டிக்காட்டாமல், பெருந்தன்மையும் நல்ல குணநலன்களும் உள்ள யதார்த்தமான கதைமாந்தர்களைக் கொண்ட படைப்பு இது. ஜெயகாந்தனே இதைத் தன் படைப்புகளில் தனக்குப் பிடித்தமானது எனக் குறிப்பிடுகிறார்.

நம்மிடையே ஒருவித நேர்மறை உணர்வைக் கடத்தும் இந்த நாவல், ஐம்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டதென்றாலும் தற்போதைய சமூகத்துக்கும் தேவையானதாக இருக்கிறது.

user_4967

★ 5/5 Feb 02, 2026

மிகவும் கவர்ச்சிகரமான நாவல்.

ஜெயகாந்தனின் லட்சியவாதம், மனிதர்கள் உயர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இதில் வெளிப்படுகிறது. புத்தகம் விவரிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது ஒரு மன எழுச்சி ஏற்படுகிறது.

user_4966

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான ஒரு நல்லுணர்வு நாவல்! ஹென்றியின் கதாபாத்திரம் இலக்கியத்தில் நான் சந்தித்த சிறந்த படைப்புகளில் ஒன்று.

ஹென்றி ஒரு நாள் கிருஷ்ணராஜபுரத்திற்கு வருகிறான் — குழந்தை போன்ற ஆர்வத்துடன் மகிழ்ச்சியைப் பரப்பி, சந்திக்கும் அனைவரின் மனதையும் வென்றுவிடுகிறான். தேவராஜ் உடனடியாக அவனை நண்பனாக ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். விரைவில், அவனது இயல்பான நல்லியல்பினால் கிராமத்தின் அனைவரையும் வென்றுவிடுகிறான். அனாதையாக வந்தவன், ஊர் முழுவதையும் தன் குடும்பமாக்கிக்கொள்கிறான்.

வளர்ப்புத் தந்தையுடனான அவனது உறவும் புத்துணர்ச்சியானது. மெலோட்ராமா இல்லை, இருள் இல்லை. அவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் பல ஒப்புமைகள் கதையில் வருகின்றன — அவனது சுதந்திரமான இயல்பில் ஏதோ தெய்வீகம் உணர முடிகிறது.

மிகவும் ரசித்தேன்!

user_4965

★ 5/5 Feb 02, 2026

யாருடனும் ஒன்றி வாழாமல், தனக்கு இது போதுமென்று, அளவுக்கு மீறி எதிலும் ஆசை கொள்ளாமல், தன் கருத்தை அடுத்தவர் மீது திணிக்காத ஒருவரை நாம் வித்தியாசமாகத்தான் பார்ப்போம். ஆனால் எந்தவொரு முன்முடிவும் இல்லாமல் அவனைப் பார்த்தால், அவன் சொல்வது சரி என்று நாமும் உடன்படுவோம் — அந்த ஒரு மனிதன்தான் ஹென்றி.

தனக்கு ரத்த சொந்தமில்லாத பப்பாவிற்கும் மம்மிக்கும் மகனாக வளர்கிறான் ஹென்றி. பெற்றோர்களின் இறப்புக்குப் பின்னால், பப்பாவின் சொந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அவன் சந்திக்கும் மனிதர்களும், சம்பவங்களுமே இந்தப் புத்தகம்.

எந்தவொரு கதையிலும் இதுதான் கதை என்று வெளிப்படையாகக் கூறாமல், சில இடங்களில் புதிராகவே விட்டுவிடுவார்கள். அப்படிச் சில புதிர்கள் இந்தப் புத்தகத்திலும் இருக்கின்றன — யார் பேச்சையும் கேட்காத பேபி ஹென்றி பேச்சை மட்டும் கேட்பது ஏன்? பப்பாவின் மனைவிக்கு என்ன ஆயிற்று? இவை போன்ற கேள்விகள் வாசகர்களை சிந்திக்கவைக்கின்றன.

ஹென்றி குறைவான வார்த்தைகளே பேசியிருந்தாலும், அனைத்தும் முத்துக்களே. நல்ல வாசிப்பு அனுபவமாக அமைந்தது.

user_4964

★ 5/5 Feb 02, 2026

ஒலிப்புத்தகமாகக் கேட்டேன், மிகவும் அருமையாக இருந்தது.

ஹென்றியின் கதாபாத்திரம் புதுமையானது — அவனுடைய கள்ளமில்லாத மனம், எதையும் சிறுபிள்ளையின் ஆர்வமிகு பார்வையுடன் புதிய சூழலைப் பார்க்கும் தன்மை, அவனுக்கும் அவனுடைய பப்பாவிற்கும் இடையிலான சம்பாஷணைகள் என எல்லாமே கவர்ந்தன.