தலைவன் - எழாலதிபன்
தலைவி - பூவெழினி
கதையில் இருந்து சின்ன முன்னோட்டம்
“அதி ப்ளீஸ்... போனை வச்சுடாதீங்க... நான் சொல்றதை கேளுங்க..”
“கேட்க கூடிய சூழலை நீயே கெடுத்துக்கிட்டடி. நீயும் சை உன் பேச்சுக்களும் சரி எல்லாமே பொய் தான். ச்சீ என்கிட்டே இப்படி கெஞ்சிட்டு இருக்கியே உனக்கு வெட்கமா இல்லையா...?” என்று இன்னும் காய்ந்தான் அவளை.
“உன்கிட்ட கெஞ்சுறதுல எனக்கு ஏன் வெட்கம். அதோட என் குழந்தைக்காக தானே கெஞ்சுறேன். இதுல என்னால மான அவமானம் எல்லாம் பார்க்க முடியாது அதி. என் குழந்தையை என்கிட்டயே குடுத்துட்டேன். ப்ளீஸ்... உன் கால்ல வேணாலும் விழறேன்” என்று மேலும் கெஞ்சியவளின் பேச்சை இடை வெட்டியவன்,
“அது என்னோட குழந்தை. உனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை...” என்ற பொழுதே குழந்தை இன்னும் அதிகமாக அழ, இந்த பக்கம் அவளால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
“அதி உன் கோவத்தை என்கிட்டே காட்டு. ஆனா பிள்ளை பாவம்.. பசியில அழறான் அதி... அவனை தவிக்க விடாத ப்ளீஸ்” என்று அவள் மேலும் சொல்ல,
“ஹ.. என் பிள்ளையை பார்த்துக்க எனக்கு தெரியும் நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். முதல்ல நீ போனை வை.”
“அதி ப்ளீஸ்... எனக்கு நெஞ்செல்லாம் வலிக்கிது... என் பிள்ளையின் பசியை ஆற்றவாவது என்னை அனுமதிடா” என்று அவள் மேலும் மேலும் கேட்க அதை மேற்கொண்டு கேட்க விருப்பம் இல்லாமல் அவன் போனை வைக்க போக,
“எழாலதி நீ செய்யிறது ரொம்ப தவறு” என்று அதிபனின் அன்னையின் குரல் கேட்க அப்பொழுது தான் இவளுக்கு மூச்சே வந்தது. இனிமேல் அவர் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை வந்தது அவளுக்கு.
பட்டென்று இவளே போனை வைத்து விட்டாள். போன உயிர் திரும்பி வந்தது போல ஒரு உணர்வு. அப்படியே சரிந்துக் கொண்டாள் சுவரில்.
வீட்டின் உள்ளே பயங்கர சத்தம். கொட்டும் மழையை தாண்டி எழாலதிபனின் குரல் வெளியே வரை கேட்டது. அதை தொடர்ந்து பொருள்கள் உடையும் சத்தமும் கேட்டது. கண்களை அழுந்த மூடிக் கொண்டாள் பூவெழினி.
அவனை நேரில் காண மிகுந்த அச்சம் எழுந்தது. ஆனால் அவனை சந்தித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறதே. என் பிள்ளை அவனின் வசம் இருக்கிறானே என்று கலங்கிப் போனாள். மேலும் மேலும் நெஞ்சில் அதிக வலி எடுக்க மழையில் நனைந்தது வேறு காய்ச்சலை கொடுக்க அவளால் ஒன்றும் முடியவில்லை. கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. ஆனால் பிள்ளையை பார்க்காமல் கண்களை மூட மாட்டேன் என்று தனக்குள்ளே உறுப் போட்டுக்கொண்டு திடமாக இருப்பது போல காட்டிக் கொண்டு நின்றாள்.
“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் அவளை இந்த வீட்டுக்குள்ள விட மாட்டேன்” என்று தன் தாய் முல்லை கொடியிடம் மல்லுக் கட்டிக் கொண்டு இருந்தான்.
“ஏன் விட மாட்டா எழாலதி...” என்று தீர்க்கமாக கேட்ட தாயை எரிச்சலுடன் பார்த்தான்.
“ம்மா அவ சரியில்ல”
“ஏன் நீ ரொம்ப சரியா..?” வெடுக்கென்று கேட்ட தாயை முறைத்துப் பார்த்தான்.
“சொல்லு எழாலதி நீ ரொம்ப சரியா நடந்துகிட்டியா அவக்கிட்ட. அவளை மட்டும் மட்டும் குறை சொல்ற.. நீ தப்பா நடந்துக்க போயி தான் அவ இப்போ இந்த நிலையில இருக்கா அதை மறந்துடாத...”
“மாம் இட்ஸ் எனப்...” என்று கர்ஜித்தான்.
“ஏன் உண்மையை சொன்ன உடன் உனக்கு குத்துதா சாம்? முழு பழியையும் அவ மேல போட்டு நீ நல்லவன்னு தப்பிக்க பார்க்கிற. அவளுக்கு யாரும் இல்லன்னு நினைக்காத நான் இருக்கேன்.” என்றார் உறுதியாக.
“அவளுக்கு நான் இருக்கேன்னு சொல்றீங்க... அப்போ இவ்வளவு நாள் என் பிள்ளையை அவ சுமந்துக்கிட்டு இருந்தது தெரியும் தானே. அப்பவே போய் அவளுக்கு புல் புரேடேக்ஷன் குடுத்து இருக்க வேண்டியது தானே.. இப்ப வந்துட்டு குதிக்கிறீங்க” என்றான் எரிச்சலுடன்.
“அப்போ என் மகன் அந்த பிள்ளைக்கு உரிமை கொண்டாடுவான்னு எனக்கு தெரியாதே சாம். ஒருவேளை அப்பவே தெரிந்து இருந்தா என் பேரனை நான் இப்படி அனாதையா விட்டு இருந்து இருக்க மாட்டேன்”
என்று சொன்னவரை விழிகள் சிவக்க பார்த்தான்.
“அவ வயித்துல உன் பிள்ளை வளர்ந்துக்கிட்டு இருக்குறது தெரிந்தும் நீயும் அவளை விட்டு ஒதுங்கி தானே இருந்த சாம்... அதை பார்த்து ஒருவேளை தகுதி இல்லாத இடத்துல இருந்து வர்ற வாரிசு தேவையில்லைன்னு நினைச்சன்னு நினைச்சேன். அதனால தான் நானும் அதை கண்டுக்கல. இப்பவும் எனக்கு என் பேரன் தான் வேணும். அவனுக்கு அவனோட அம்மா வேணும். அதுக்கு பூவெழினி இந்த வீட்டுக்கு வரணும்” என்றார்.
“ம்ம்மா” என்றான் உச்ச பட்ச கடுப்புடன்.
“எனக்கு தெரியும் சாம். நீ எதுக்கு அவசர அவசரமா தமிழ்நாடுக்கு வந்தன்னு. அதனால தான் நானும் உன் கூட வந்தேன்.” என்றார் அவனை புரிந்துக் கொண்ட தாயாய்.
“திஸ் இஸ் மை லைப். இதுல முடிவெடுக்க வேண்டியது நான் மட்டும் தான்” என்று உறுதியாக சொன்னான் எழாலதிபன்