Reviews for ஒரு போர்க்களமும் இரண்டு பூக்களும்

17 reviews total

user_16756

★ 5/5 Feb 02, 2026

முழுக்க முழுக்கக் காதலை மையமாக வைத்து நெய்யப்பட்ட கதை. காதலின் தூய்மையையும் ஆழத்தையும் உணரவைக்கும் படைப்பு.

user_16755

★ 5/5 Feb 02, 2026

அற்புதமான படைப்பு! வைரமுத்து ரசிகர்களுக்கும் காதல் இலக்கியம் விரும்புவோருக்கும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல். கவிஞரின் மொழிநடை மனதை உருக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

user_16754

★ 3/5 Feb 02, 2026

தலைப்பிலேயே இது ஓர் தெற்கத்தி காதல் கதை என்றாலும், கதைக்களத்தின் எதார்த்தத்தாலும் கதாபாத்திரங்களின் சோபிதத்தாலும் சில பக்கங்களிலேயே கவிஞர் நம்மை ஆட்கொள்கிறார்.

வழக்கமான கதை. எதிர்பாராத நகர்வுகள் சற்றே சுவாரஸ்யமாக்கினாலும், எதிர்பார்த்த முடிவு ஒரு குறைதான்! அழுது முடித்த பின்னும் ஆறாத சில சோகங்கள் இருப்பதுபோல, வாசித்தபின்னும் ஓர் மென்சோகம் என் மனதில் இழையோடியது — ராசதுரை, அம்சவல்லிக்காக.

எழுத்தின் நடை மற்றும் அதன் சுவைக்காக ஒரு முறை வாசிக்கலாம்.

user_16753

★ 4/5 Feb 02, 2026

வைரமுத்து எழுதிய இந்நூல், கிராமத்து நாட்டியமாடும் பெண்ணுக்கும் செல்வந்தர் மகனுக்கும் இடையேயான காதல் கதையைச் சொல்கிறது. வைரமுத்து இடையிடையே தனது கவித்துவ உணர்வையும் தத்துவ சிந்தனையையும் கலந்திருக்கிறார். ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாகவும், ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது. சிறந்த வாசிப்பு அனுபவம்.

user_16752

★ 4/5 Feb 02, 2026

வைரமுத்துவின் தனித்துவமான நடையில் வந்துள்ள நல்ல நாவல். கதையின் விவரிப்பு மிகவும் அருமை. ஒவ்வொரு வரியிலும் இடம்பெறும் எதுகை மோனைகளும், அவற்றின் பின்னால் புதைந்திருக்கும் ஆழமான பொருளும் இந்நூலைத் தனிச்சிறப்பாக்குகின்றன. வலுவான கதைக்களம் இல்லாவிட்டாலும், வலுவான உணர்வுகள் நிரம்பியுள்ளன.

user_16751

★ 4/5 Feb 02, 2026

மேல்சாதி கீழ்சாதி காதல் என ஏற்கனவே அரைத்துப் புளித்துப் போன மாவுதான் என்றாலும், இம்முறை வைரமுத்துவின் பேனாவால் அரைத்ததால் தனிச்சுவையுடன் இருக்கிறது!

ராசதுரை-அம்சவல்லி — இவர்களின் கள்ளங்கபடமில்லாத காதலைத் தங்களின் கௌரவத்திற்கும் சுயநலத்திற்கும் பயன்படுத்தி, மனித உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் உறவைப் பிரிக்க முயல்கின்றனர். இறுதியில் வென்றது காதலே!

கதையின் துவக்கத்தில் ராசதுரை மீது ஏற்படும் கோபமும் வெறுப்பும், கதை நகர நகர அதுவே பரிதாபமாகவும் பாசமாகவும் மாறுகிறது. ராசதுரையின் காதல் தூய்மையானது, அப்பழுக்கில்லாதது! அவன் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும்போது நம் கண்களும் கலங்குவது நியாயமே!

அம்சவல்லி வெறும் ஒப்புக்கு வரும் நாயகியாக இல்லாமல், மனதில் பதிந்து நிற்கிறாள்! கண்டமனூர் ஜமீனை எதிர்த்து அவள் கேட்கும் கேள்விகள் சபாஷ் போடவைக்கின்றன. நடுவில் கொஞ்சம் இழுத்தாலும், கதையின் க்ளைமாக்ஸில் கண்களைக் கலங்கவைத்துவிடுகிறார் வைரமுத்து!

ஒரு போர்க்காலமும் இரண்டு பூக்காலும் — என்றும் நம் நினைவில் வாடாமல் இருக்கும் பூக்கள்!

user_16750

★ 4/5 Feb 02, 2026

பல காலத்திற்கு முன்பு இருந்த சாதி கொடுமைகளால் தீட்டப்பட்ட காதல் கதை. முன்னுரையில் கூறியதைப் போல "அழுது முடித்தும் ஆறாத சோகத்தைப் போல, எழுதி முடித்தும் முடியாத சோகம்" — இதைப் படிக்கையில் தெரிகிறது.

"ஒரு ஈட்டியில் இரு உயிர் சென்றன, ஒரே ஈட்டியில் இரு உயிர் நின்றன — ராசதுரை, அம்சவல்லி!" அந்தப் பள்ளத்தாக்கில் மட்டும் குயில்கள் கூவுகின்றன, ஓடையும் பேசிக்கொண்டே போகின்றது. அந்த இடத்தில் மட்டும் நிலவின் கிரணங்கள் விழுகின்றன. கண்டமனூர் ஜமீனைக் காணவில்லை. கடந்து செல்லும் ஜனங்கள் இரண்டு பூக்களைப் போட்டுவிட்டே போகிறார்கள்... காதலர்களுக்கு சாவுண்டு, காதலுக்கு?!

வைரமுத்துவின் இயல்பான படைப்புகளில் ஒன்று. வைரமுத்து ரசிகர்களுக்கும், காதலின் பொருளை அறிந்தவர்களுக்கும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.