"அரசூர் வம்சம்" - இரா முருகன்
அரசூர் வம்சம் என்றபோது, ஏதோ வீரசூர அம்சங்கள் நிறைந்த புனைவு நாவலாக இருக்கலாம் என தேர்ந்தெடுத்த புத்தகம். ஆனால் முற்றிலும் மாறாக 19ம் நூற்றாண்டு ஆங்கிலேய ஆட்சிப் பின்னனியில், தற்போதைய புதுகோட்டை/ராமநாதபுரம் பக்கம் உள்ள கற்பனை ஊரான அரசூரிலும், கொல்லம் அம்பலப்புழையிலும் மூன்று பிரதான குடும்பங்களில் உள்ள எண்ணற்ற கதைமாந்தர்களுக்கிடையே நகைச்சுவை களியுடன் கதை நடப்பதாக எழுதப்பட்டுள்ளது.
அதாவது அரசூரில் வசிக்கும் ஜமின்தார், சுப்பரமணிய ஐயர் குடும்பம், அம்பலப்புழை குப்புசாமி அய்யன் குடும்பங்களுக்குள் நடக்கும் கதையாக எழுதப்பட்டுள்ளது.
அரசூர் மூத்தகுடி பெண்கள் எனும் இறந்தபோன பெண்கள், ஜமின் ராணியின் இறந்த தந்தை புஷ்டிமீசை கிழவன், சாமிநாதனுடன் சம்போகிக்கும் 300வருடத்திற்கு முன் இறந்த மூத்தகுடி பெண் என பல இறந்தவர்களையும், நிகழ்கால கதைமாந்தர்களுடன் உரையாடவைத்திருப்பது, நமக்கு புதுமையாக தெரிகிறது.
‘Dark-Humour’, ‘Fantasy’, ‘Fictional’ எனும் வகைப்படுத்தல்களில் இந்நாவலை சேர்க்கலாம். ரசாபாச வகை நிகழ்வுகளையும், திட்டுவதற்கு பயன்படத்தக்கூடிய சொற்களையும் நயமாகவும் நகைச்சுவையாகவும் கதைமாந்தர்களுக்குள் நடக்கும் உரையாடலில் நிகழ்த்தியிருக்கிறார், ஆசிரியர்.
அம்பலப்புழைக்கு பயணப்படும் நேரங்களில், மலையாளம் கலந்த தமிழில் செல்லும் எழுத்து நடையும்,. பல இடங்களில் கொங்கை, கொக்கோகம், சம்போகம் என கிளர்ச்சி நடையுமாக செல்கிறது.
இக்கதையில், பல்வேறு கதைமாந்தர்களை அமைத்து இருந்தாலும், வாசிப்பவருக்கு குழப்பம்
ஏற்படுத்தாவண்ணம், ஒவ்வொருமுறையும் அறிமுகப்படுத்தும் வண்ணமாக, ‘ஜோசியர்’ அண்ணாசாமி, வைத்தியர் பீடாரதர் என குழப்பம் ஏற்படாமல், நம்மை தொடர்படுத்திகொள்ள ஏதுவாக அறிமுகம் செய்யப்படுகிறது.
இனி முக்கிய கதைமாந்தர்களின் பெயர்களையும், அவர்கள் தொடர்பான சிறுகுறிப்பும் பார்க்கலாம்.
"அரசூர்":
* சுப்ரமணிய ஐயர்(புகையிலை வியாபாரி) - மனைவி கல்யாணி
மகன்கள்:
* 'சாமிநாதன்', வேதவித்து, மனப்பிறழ்வினால், 300 வருடங்கள் முன் இறந்த குருக்கள் மகள் பாப்பாத்தியம்மாளுடன் சம்போகம்.
* 'சங்கரன்', தந்தையின் வியாபாரத்தை விருத்தி செய்ய, யாழ்ப்பாணம், மதுரை, சென்னை பட்டணங்களுக்கு செல்கிறான். சென்னை பட்டண கப்பல் துரைசானிகளிடம் புணர்ச்சி பழுகுகிறான். அம்பலப்புழை பகவதியை மணந்து வம்ச விருத்தி செய்கிறான்.
* சுப்பம்மாள், குடும்பத்திற்கு மூத்தவள், நித்திய சுமங்கலி, மூத்தகுடி பெண்களிடம் எப்போதும் சகவாசம், விக்ரமாதித்தியன்-வேதாளம் போல.
* சுந்தர கனபாடிகள், -சுப்ரமணியையரின் அத்தான்.
* கச்சேரி ராமநாதய்யர், சுப்ரமணியய்ரின் ஒன்று விட்ட சகோதரர்.
* ஜோசியர் அண்ணாசாமி ஐய்யங்கார்.
* ஜமீன்தார் ராஜா, வயது முதிர்ந்தும், வாரிசில்லாதவர். இளம் மனைவிக்கு கணவனானவர். துரைத்தனத்தார் மானிய புண்ணியத்தில் பிழைப்பும், அரண்மனையில் வௌவாலுமாக ஓடுகிறது. ராணி, கணவனை வழிநடத்தும் காரிகை.
* பனியன் சகோதரர்கள், ஜமீன்தாரின் குறிப்பறிந்து உதவிக்கு வரும் வெளியாட்கள்.
* ராணியின் தகப்பனார் புஷ்டிமீசைக் கிழவன்.
* கொட்டக்குடி தாசி.
"அம்பலப்புழை":
* குப்புசாமி அய்யன், - தம்பிகள் மற்றும் மைத்துனர்களுடன் கரண்டி உத்தியோகம்(சமையல் செய்து) அதன் மூலம் வரும்படி பார்க்கும் குடும்பத் தலைவன். மனைவி விசாலாட்சி.
* துரைசாமி அய்யன்- அண்ணனுக்கு துணை. மனைவி காமாட்சி.
* தங்கைகள் லட்சுமி, அலமேலு., முறையே வீட்டோட மாப்பிளைகளானார்கள், ராமேந்திரனும் சோமநாதனும்.
* கிட்டாவய்யன், ஓட்டல் நடத்தி சற்றே வேகமாயிட்டு பணம் பண்ண துடிக்கும் தம்பி, மனைவி சிநேகாம்பாள் உபாயத்தில். பிற்பகுதியில், பணத்திற்காக மதம் மாறவும் தயாராகிறான்.
* பகவதி, அரசூர் சங்கரனுக்கு மனைவியாகிறாள்.
"சென்னை":
* பிச்சை ராவுத்தர், சுப்ரமணிய அய்யரின் வியாபார நண்பர்.
* கருத்தான், ராவுத்தரின் மகன், சங்கரனின் சென்னை விஜயத்து நண்பர்களின் ஒருவன்.
* சுலைமான், கருத்தான் மூலமாக சங்கரனின் நண்பன்.
* வைத்தியநாதன், கச்சேரி ராமநாதய்யர் மகன். அதாவது சங்கரனின் ஒன்றுவிட்ட அண்ணன். சென்னை போர்ட் டிரஸ்ட்ல் குமாஸ்தா வேலை.
* கோமதி. வைத்யநாதனின் மனைவி. சங்கரனுக்கு காபி எனும் அமுதபானம் அருளிய அன்னபூரணி.
460 பக்கங்களில் 52 அத்தியாயங்களான இந்நாவலில் பெரியதாக எந்தவொரு பெரிய கதைநகர்த்தலும் இல்லாமல், ஜனரஞ்சகமாக நாவலை கொண்டு சென்றிருக்கிறார் திரு இரா.முருகன். வம்படியாக புத்தகத்தை வைத்தாலொழிய, வாசிப்பை நிறுத்தமுடியாது. அப்படி ஒரு சுவாரசியம், ஹாஸ்யம் !
2004இல் வெளிவந்த இந்நாவல், உரையாடல்களாய் இல்லாது விவரணைகளால் ஆன நடையில், புதுமையானதொரு அனுபவத்தை தரவல்லதாக உள்ளது.
புத்தகத்திலிருந்து ...
\
அரசூர் பற்றி எழுது.
முன்னோர்கள் சொன்னார்கள்.
அவர்கள் என் மேசையில் ஓரங்களில் புகை போல் ஒட்டிப் படிந்து சூழ்ந்தார்கள். என் கம்ப்யூட்டர் திரையில் பனியாகப் படர்ந்து மறைத்தார்கள். காப்பிக் கோப்பையிலும் அவர்கள் வாடை.
அது புகையிலை வாடை. விபூதி வாடை. மஞ்சள் வாடை. தூரத்துணி வாடை. பெரிய கங்காளங்களில் சோறு பொங்கும் வாடை. மாதாகோயில் அப்பத்தின் வாடை .அவர்கள் ஓரமாக உட்கார்ந்தபடி என்னை பார்த்தார்கள் அரசூர் பற்றிய வரலாற்றை எழுது. எங்களைப் பற்றி எழுது.
/
\
பிராமணனுக்கு விதிக்கப்பட்ட தொழில் இல்லைதான் புகையிலை விற்பது. தர்பைக் கட்டை நீர்க்காவி ஏறிய அங்கவஸ்திரத்தில் இடுக்கி கொண்டு அவன் வைதீகனாக வேகு வேகு என்று ஊரெல்லாம் நடந்து கணபதி ஹோமமும், அமாவாசை தர்ப்பணமும், ஆயுட்ஷேம ஹோமமும், ஹிரண்ய திவசமும் செய்து வைக்கக் கடமைப்பட்டவன். அதன்மூலம் லவுகிகற்களாலான கிரகஸ்தர்களை ஆசாரமாக ஜீவிக்கவும் அப்புறம் ரவ்ரவாதி நகரங்களில் போய் அடையாமல், வைதாரணி நதி வழியே பித்ருலோகம் பத்திரமாக போய்ச் சேரவும் ஒத்தாசை பண்ண வேண்டியவன். இதற்கு என்று விதிக்கப்பட்ட தட்சணையை வைத்து தானும் கிரகஸ்தனாக ஜீவித்து, வம்சவிருத���தி பண்ணி, பித்ருக்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து இவனும் வைதாரணி கரைக்கு ஒதுங்க வேண்டியவன்.
ஒரு சின்ன குடும்பத்தை சம்ரட்சிக்க தோதாக வைதீகத்துக்கு தட்சணை வரும். குடுமியில் எள் இரைப்பட்டு மிச்சம் இருக்கும். திவசம் முடிந்து இடுப்புத் துண்டை தரையில் விரித்து கிரகஸ்தன் கும்பிட அந்த துண்டில் கால்பதித்து அசதியோடு நடக்கலாம். உங்களுக்கு ரொம்ப சிரமம் என்று அவன் உபசாரமாக சொல்வதை அப்பம் வடை அதிகம் சாப்பிட்ட ஏப்பத்தோடு ஏற்றுக்கொள்ளலாம். வாழைக்காயையும் பூசணிக்காயையும் தலையிலும், தானமாக வந்த அரிசியை மேல் துண்டில் தர்ப்பையோடு கட்டித் தோளிலும் தொங்கவிட்டுக் கொண்டு மத்தியானத் தூக்கத்துக்கு வீட்டுக்கு நடக்கலாம்.
/
\
சுப்பம்மா கிழவி, காசியில் புருஷன் எங்கும் தட்டுப்படாமலே போக அவனை விட்டுவிட்டு வர, மற்றவர்கள் புடலங்காய், கொத்தவரங்காய், பலாப்பழம் என்று விட்டுவிட்டு வீடு வந்தார்கள்.
இனி ஆயுசுக்கும் அந்தந்த காய்கறி சாப்பிட கூடாது என்ற வருத்தம் அவர்களுக்கு என்றாலும் சுப்பம்மா கிழவிக்கு ஒரு வருத்தமும் இல்லை.
/
\
இந்த ஓட்டை அரண்மனையை சீர்படுத்துவதென்ன, புத்தம் புதுசாக வெள்ளை சுண்ணாம்பும், கோழி முட்டையும், சீமைச் சாந்தும் குழைத்துப் பிரம்மாண்டமாகத் தூண் நிறுத்தி ஒரு பெரிய பங்களாவே நிர்மாணித்து விடமுடியும்.
/
\
அந்தஸ்தில் உயர்ந்த யாரையாவது சந்திக்க போகும் போது அவர்கள் கையில் பழத்தையோ, பூ மாலையையோ கொடுப்பது அவர்கள் கால வழக்கம் போல, கொடுத்த பழத்தை ஒரு தடவை முகர்ந்து பார்த்ததும் திரும்ப வாங்கி வைத்துக் கொள்வதும் அதே கால தேச வர்த்தமானம் அனுசரித்துத் தான் இருக்கவேண்டும்.
/
\
ரிஷிகள் அந்த காலத்துல மாமிச போஜனம் பண்ணியிருக்காங்களாக்கும். அஜம், பக்ஷி, ஏன், பசு.
/
----
மேஜிக்கல் ரியலசம் என்ற உத்தியில் ஒரு புது வரவு என்று தெரிந்த பின்பு ஒரு வித தயக்கத்தோடே ஆரம்பித்தேன். சாம்பார் சாதத்தையும், சைனீஸ் பிரைட் ரைஸ்சும், இத்தாலியன் பாஸ்டாவையும் கலந்து கட்டியது போல் ஒரு ஆரம்ப அவஸ்த்தை. ஆனால் ஒரு சுவாரசியம் மெதுவாக பிடிபட்டது. பாலுணர்வை ஒரு தேங்காய்த்துருவல் போல தூவி விதைத்திருக்கிறார் முருகன். ஏனோ தெரியவில்லை, நான் சமீபத்தில் படித்த மலையாளம் சம்பந்தப்பட்ட புதினங்களில் அப்படித்தான் இருக்கிறது. பொற்றேக்காடின் விஷக்கண்ணி, ஜெமோவின் காடு போன்றவற்றிலும் அப்படியே.அது சில இடங்களில் பாயாசம் போல இனித்தாலும், சில இடங்களில் சோற்றில் வந்த கல்போல, சாப்பாட்டில் அதிகமாய் சேர்த்த உப்பு போல கசக்கிறது.
இதையெல்லாசம் தாண்டி, சுவாரசியமான நடையாலும், அக்கால சம்பவக்கோர்வைகளாலும், நம்மைக்கட்டிபோட்டு, ஒரு கற்பனை உலகுக்கு நம்மை அழைத்துப்போகும் பனியன் சகோதரர்களாய் செலுத்துக்கிறார். அக்கால காட்சிகளை கற்பனையில் விரித்து ஓரு ஆழ்ந்த அனுபவம் அளித்திருக்கிறார். தமிழிலொரு முறையேனும் படிக்க வேண்டியது.