Reviews for கிராமம் நகரம் மாநகரம்

13 reviews total

user_14843

★ 5/5 Feb 02, 2026

தன் பாடல் வரிகளால் பலரின் மனத்தைக் கட்டிப் போட்ட கலைஞன் நா.முத்துக்குமார். கிராமத்தில் பிறந்து, நகரத்தில் படித்து, சென்னை போன்ற மாநகரத்தில் தனது கலைப் பயணத்தைத் தொடர்ந்தவர்.

இந்த மூன்று நிலப்பரப்பில் அவர் சந்தித்த மனிதர்கள், அவருக்கு ஏற்பட்ட நிகழ்வுகளே இந்தப் புத்தகம். தான் சந்தித்த மார்க்சீய தோழர், புத்தகத்தின் மீதிருந்த ஈர்ப்பு எனப் பல நினைவுகள் கவிஞரைப் பற்றிக்கொண்டன.

வாசிப்புப் பழக்கம் குறைந்து விட்டது என்பது உண்மை. எந்தவொரு வீட்டிற்குச் சென்றாலும் புத்தக அலமாரி இருக்கிறதா என்று கண்கள் தேடுகின்றன. தொலைக்காட்சிப் பெட்டிகள் பெரிதாகிக் கொண்டே போகின்றன, புத்தக அலமாரிகள் குறுகிக் கொண்டே போகின்றன.

user_14842

★ 5/5 Feb 02, 2026

கல்கி வாராந்தரியில் வெளிவந்த 23 கட்டுரைகளின் தொகுப்பு இப்புத்தகம். ஒவ்வொரு கட்டுரையின் வரிகளும் கவிதை வரிகளுக்கு ஒப்பானவை.

நா.முத்துகுமார் தன்னுடைய கிராமத்தில், நகரத்தில், மாநகரத்தில் தான் சந்தித்த மனிதர்கள், உயிரினங்கள் பற்றிய அனுபவங்களையும், கிராம-நகர-மாநகரத்துக்குள்ளான ஏற்ற தாழ்வுகளையும் கவித்துவ கட்டுரைகளாக எழுதியுள்ளார்.

கட்டுரைகளாக எழுதியிருக்கிறார் என்பதை விட, அவரது அனுபவங்களைக் கவிதைகளாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் எனலாம். வாசிக்கையில், அக்காட்சிகள் சினிமாவின் பாடல் கனவுக் காட்சிகளைப் போல வண்ணமயமாகவும் இதமாகவும் உணரவைக்கிறது.

ஒரு சில இடங்களில் எழுதப்பட்டிருக்கும் உண்மைகளையும் உவமைகளையும் வாசிக்கையில், நம்மையறியாமலேயே புன்னகைத்துக் கொண்டிருப்போம்.

நா.முத்துக்குமாரின் படைப்பின் வாசிப்பு அனுபவத்தைச் சிலாகிப்பதைவிட, அவரை வாசிப்பதே வாழ்க்கைக்கான பெரும் அனுபவம் எனலாம்.

user_14841

★ 5/5 Feb 02, 2026

வறண்ட மனதை ஈரமாக்கியது நா. முத்துக்குமாரின் வரிகள், சில இடங்களில் கண்களையும்தான். மனத்தின் கனத்தைக் குறைக்கும் வரிகளாலும் அழகிய எழுத்துக்களாலும் நிரம்பியுள்ளது இந்த நாவல்!