Reviews for பள்ளிகொண்டபுரம்
18 reviews total
user_12428
★ 4/5 Feb 02, 2026நீல பத்மநாபனின் பள்ளிகொண்டபுரம் குறித்த என் உணர்வுகள் கலவையானவை. இரண்டு நாட்களை உள்ளடக்கிய நினைவோடைக் கதைசொல்லலில், சோகமான நடுத்தர வயது ஆணே நாயகன். முதல் பாதி மெதுவாகவும் சலிப்பாகவும் இருந்தது — நகரம் முழுவதிலிருந்தும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் அறிமுகமாகின்றனர். மேலும் நாயகனின் சாதிய மற்றும் பாலின வேறுபாட்டுக் கருத்துகள் மிகவும் எரிச்சலூட்டின.
ஆனால் சுமார் நூறு பக்கங்களுக்குப் பிறகு, கதைசொல்லியின் நம்பகமின்மை வெளிப்படையாகத் தெரிய வரும்போது புத்தகம் சுவாரசியமாகிறது. ஆசிரியர் நாயகனை வெறுக்கவே உத்தேசித்தாரா என்று தெரியவில்லை, ஆனால் அவரது நடத்தைக்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது.
இருப்பினும் புத்தகத்தின் இறுதியில் கதை மீண்டும் குழப்பமாகிறது — கணிக்கக்கூடிய முடிவும் உரையாடல்களும் நாயகனின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சியாகத் தோன்றின. தஸ்தயேவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகளையும் ஜூலியன் பார்ன்ஸின் முடிவின் உணர்வையும் நினைவூட்டும் கதைக்குரல். மொத்தத்தில் இது கெட்ட புத்தகமல்ல — வெறுப்பூட்டும் கதாபாத்திரத்துடன் கூடிய நல்ல புத்தகம்.
user_12427
★ 3/5 Feb 02, 2026நாற்பத்தெட்டு மணிநேரங்களில் திருவனந்தபுரத்தைச் சுற்றி வரும் அனந்தன் நாயரின் நினைவோடை வழியே அவரது சோகங்களும் சாபங்களும் நிரம்பிய வாழ்க்கைச் சித்திரத்தை எளிதில் கடத்திவிடுகிறார் நீல. பத்மநாபன்.
வேதனையே வடிவான அவர் வாழ்க்கையில் இன்பமேதுமில்லை — தொடர் தோல்விகளும் சங்கடங்களும் இன்னல்களும் வருத்தங்களும் மட்டுமே. மனைவியால் பதினைந்து வருடங்களுக்கு முன் கைவிடப்பட்ட குடும்பத்தை மறுவிவாகம் செய்யாமல் பிழைப்பு நடத்திக் கரையேற்ற முனையும் அவர் மனம் ஏமாற்றங்களுக்கும் கசப்புகளுக்கும் சுய பரிதாபத்துக்கும் இடையே உழல்கிறது.
வசதியான குடும்பத்தில் பிறந்து ஏழ்மைக்குச் சரிந்தாலும், சாதிச் சலுகைகளால் ஒப்பேற்ற முடிகிறது. அழகான கார்த்தியாயினியை மணக்கும் காலம் மகிழ்ச்சி நிறைந்ததாய் அமைகிறது. ஆனால் நோயாலும், அதிகார வர்க்கத்திலிருக்கும் விக்ரமன் தம்பி மனைவியின் மீது ஆசை கொள்வதாலும் மண வாழ்க்கையில் பிரளயம் தொடங்குகிறது. அதிகாரப் பலம் கொண்ட தம்பியை எதிர்க்க திராணியில்லாமல் மனைவியின் மீது கோபம் கொண்டு அடித்துக் காயப்படுத்துகிறார். வாழ்வே நரகமாகிறது.
இரு பிள்ளைகளும் சாதி மீறிக் காதல் கொண்டிருப்பதை அறிய வரும் அவர், மகள் மாதவிக்குட்டி பக்கம் இருந்தாலும், மகன் பிரபாகரன் தாயின் பக்கமே நியாயமிருப்பதாகக் கருதுவதால் மிகுந்த மனவேதனைக்குள்ளாகி, தன் வாழ்க்கை ஒரு ஒட்டுமொத்த தோல்வி எனக் கருதி உயிர்விடுகிறார்.
1970இல் இக்கதையின் கரு அளித்திருக்கக்கூடிய அதிர்ச்சியை ஊகிக்க முடிகிறது. காமம் தவறு, கட்டுப்பாடான வாழ்க்கையே சிறந்தது ஆகிய கருத்துகள் நாயகனின் குற்ற உணர்வின் மூலம் வெளிப்படுகின்றன. சாதியே மையமாக விளங்கும் சூழலின் பரிதாபமும் ஆற்றாமையும் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. நினைவோடை உத்தியால் ஏற்படக்கூடிய அயர்ச்சியை மொழிநடை சரிக்கட்டினாலும், கடைசி ஐம்பது பக்கங்களில் சலிப்பு தட்டுகிறது.
வாழ்வில் நேர்ந்த அநீதிகளை எண்ணி வருந்தும் ஒருவரின் கதையாகவோ, தான் விளைவித்த செயல்களுக்குப் பொறுப்பேற்க மறுக்கும் பிடிவாதமான ஒருவரின் கதையாகவோ பள்ளிகொண்டபுரத்தை வாசிக்கலாம்.
user_12426
★ 3/5 Feb 02, 2026மொழிபெயர்ப்பில் நிச்சயமாக ஏதோ இழக்கப்பட்டுள்ளது. நல்ல கதை, ஆனால் வாசகரைப் பிடித்திழுக்கத் தவறிவிடுகிறது. முக்கிய கதாநாயகனான அனந்தன் நாயரைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரு பரிமாணமாகவே உள்ளன. கதையின் முழு ஆற்றல் வெளிப்படுத்தப்படவில்லை. விரைவாகவும் எளிதாகவும் வாசிக்கக்கூடிய புத்தகம் என்பது ஒரு சந்தேகத்திற்குரிய நேர்மறை அம்சம்.
user_12425
★ 2/5 Feb 02, 2026அனந்தன் நாயரின் மனதில் தேங்கிக் கிடந்த சோகங்கள் எல்லாம் திருவனந்தபுரத்தின் சாலைகளில் அவர் கால்கள் பதிய பதிய நமது மனதிலும் பதிகின்றன. அதன் ஆழத்தை மிகவும் அழுத்தமாக கடத்தியிருக்கிறார் ஆசிரியர்.
ஆனால் இந்தப் புத்தகம் எனக்காக வைத்திருப்பது என்ன என்ற கேள்விக்கு பதில் காண இயலவில்லை. அதில் என் மீது பிழை இருக்கலாம், ஆனால் அப்படியே தோன்றுகிறது.
user_12424
★ 5/5 Feb 02, 2026திருவனந்தபுரத்தின் குறுக்குவெட்டில், ஐம்பது வயதான அனந்தன் நாயரின் நாற்பத்தெட்டு மணிநேர வாழ்க்கையும், அந்த குறுக்குவெட்டில் 40-50களின் திருவனந்தபுரமும் தான் இந்நாவல்.
நம் எல்லோரிடமுமே நாம் செய்தது மிகச் சரியானவையே என நியாயப்படுத்தும் குணம் அறியாமலேயே நிரம்பியிருக்கிறது. நாம் செய்தவற்றை சரியென நிரூபிக்க எந்தளவு அடிமட்டத்துக்கு இறங்கவும் மனங்கள் தயாராகவே இருக்கின்றன. இந்நாவலின் முதல் வரி தொடக்கம் கடைசி வரி வரை நாயகனான அனந்தன் நாயரும் இதைத்தான் செய்ய முயல்கிறார்.
முதல் வாசிப்பில் அனந்தன் நாயரோடு ஒத்துப்போகும் நாம் இரண்டாம் வாசிப்பில் அவரை முற்றாக மறுதலிப்போம். எல்லாமே மனநிலையைப் பொறுத்தவை தானே.
user_12423
★ 5/5 Feb 02, 2026ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பு, பரிவு, கடமை, உரிமை போன்றவற்றோடு பெருமை, அகங்காரம், தன்னலம் போன்றவையும் இருக்கவே செய்கிறது. வாழ்க்கையின் போராட்டங்களில் சில முன் நிற்கும், சில பின் தள்ளிப் போகும். ஆனால் எது என்றாலும் சுயம் என்பதன் அடித்தளத்தின் மேலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும்.
அப்படிப்பட்ட சுயத்திற்கு அடி விழும்போது எழும் வலியும் வேதனையும் மனிதனை அடியோடு சாய்த்துவிடும். அத்தகைய நிலையால் ஆட்கொள்ளப்பட்டவர் தான் அனந்தநாயர். அவரது இரு நாட்களின் நினைவலைகளில், கடந்து வந்த ஐம்பது வருட வாழ்வை காட்சிப்படுத்துகிறது இப்புதினம்.
ஐம்பதாவது வயதில் நின்று கொண்டு தன் வாழ்வை திரும்பிப் பார்க்கிறார் அனந்தநாயர். திருவனந்தபுரத்தின் வீதிகளும், பத்மநாப சுவாமி கோயிலும், அங்குள்ள மனிதர்களும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாழ்வின் சுவடுகளைக் காட்சிப்படுத்துகின்றனர். மனைவி கார்த்தியாயினி அவரையும் இரு குழந்தைகளையும் விட்டு வேறொரு திருமணம் செய்து போக, இரு பிள்ளைகளுடன் தனித்து நிற்கிறார்.
பிள்ளைகள் அவரவர் வாழ்க்கை என செல்கையில், தான் வாழ்ந்த வாழ்க்கைக்கான பொருள் என்ன என்ற கேள்வியில் கடந்த காலம் நம்முன் விரிகிறது. அரண்மனை ஊழியராகப் பணிபுரிந்த நிலை, மனைவியின் பிரிவு, பின்னான வாழ்வின் சரிவு, தனியனாக பிள்ளைகளின் வளர்ப்பு — நிகழ்காலமும் கடந்தகாலமும் பின்னிக்கொண்டு காட்சிப்படுத்தப்படுகிறது.
ஆண் எனும் அகங்காரமே வாழ்வின் வீழ்ச்சிக்குக் காரணம் என உணர்த்தும் அதே வேளையில், அனந்தநாயர் அதனை உணர மறுக்கிறார். மகன் பிரபாகரன் தாயிடமே ஆதரவை நல்குவதும், தந்தையின் இயலாமையை புறக்கணிப்பதும் கேரளாவின் தாய்வழிச் சமுதாயப் பண்பாட்டைக் காட்டுகிறது.
ஆசிரியரின் எளிய மொழிநடையில் திருவனந்தபுரத்தின் வீதிகள், கோயில்கள், மனிதர்கள் அனைத்தும் வாழ்வியல் தோற்றங்களோடு அடையாளப்படுத்தப்படுவது இதன் கூடுதல் சிறப்பு.
user_12422
★ 4/5 Feb 02, 2026தனி மனித வாழ்வில் இளைஞனாய் உருவெடுத்து அந்தம் வரை தொடரும் திருமணபந்தம், குழந்தைகளோடான உறவு, பொருளாதார ஏற்ற இறக்கங்கள் என அனைத்து சாராம்சங்களையும் எதார்த்தமான விவரணையோடு சொல்லுவதே பள்ளிகொண்டபுரம் கதையின் உட்கரு.
கதைக் களம் திருவனந்தபுரத்தின் பத்மநாபக் கோவிலையும் அதனைச் சுற்றியுமே அமைகிறது. கதையின் காலக்கட்டம் கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில் தொடங்கி, அதற்கு முன்னே உள்ள மூன்று தலைமுறைகளைப் பற்றி நாற்பத்தியெட்டு மணிநேரத்தில் சிந்திப்பதே கதையின் அமைப்பு. முதல் பதிப்பு 1970களில் வெளியிடப்பட்டு தற்போது காலச்சுவடில் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியரின் எழுத்து நடை ஒவ்வொரு இடத்தின் சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்துவதில் மிளிர்கிறது. பத்மநாபக் கோவிலின் விவரணைகளும் அதன் வரலாறும் அருமை. கேரள மொழியின் வாடை அதிகம் வீசினாலும் மொழியின் மீது ஆர்வமிருந்தால் அது பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
அனந்த நாயர் என்ற கதாப்பாத்திரத்தில் தொடங்கி குடும்பப் பின்னல்களிலேயே நகரும் கதையில், மனையாளான கார்த்தியாயினிக்கும் அவருக்குமான உறவில் ஏற்படும் தாழ்வுமனப்பான்மை, சந்தேகம் என்ற நோய், மோதல்கள், பிரிவு, குற்றப்பொருத்தல்கள் என விரிகிறது. குழந்தைகளோடான உறவில் மகன் தகப்பன் மீது காட்டும் வெறுப்புச் சூழலாய் நகர்ந்தொடுங்குகிறது.
இல்லற பந்தம் என்பது பரஸ்பரம் புரிந்து அன்பு செலுத்தி இக்கட்டான சூழ்நிலைகளில் தோள் கொடுத்து வாழும் சுயநலமில்லா வாழ்க்கையே என்பதை, சுயநல வாழ்க்கையின் விளைவுகளையும் ஆற்றாமையும் சொல்வதன் மூலம் ஆசிரியரின் தொலைநோக்குச் சிந்தனை வெற்றிக் களத்தை தொட்டுவிடுகிறது.
user_12421
★ 5/5 Feb 02, 2026மிகச் சிறந்த, தனித்துவமான கதை சொல்லல் நுட்பத்தைக் கொண்ட படைப்பு. ஆசிரியரின் கதைப் பின்னல் முறை வாசகரை ஆழமாகப் பிடித்திழுக்கிறது.