சிந்தூரத்தின் சக்தி ..
தேசியம் என்பது வெறும் வரைபடம் அல்ல; அது நம் இரத்தத்தில் ஊறிய மொழி, கலாச்சாரம் மற்றும் அறத்தின் அடையாளம். 'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி' என்று போற்றப்படும் நாம், சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்டவர்கள். வாழ்வின் பொருள், நீதி, கல்வி,ஒழுக்கம் என அறிந்து, அதனை பயின்று, அவ்வாறே நடந்து, 'அறமே வெல்லும்' என்ற தர்மத்தின் வழியில் நடக்க பழகியவர்கள்.
இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாகத் தலைநிமிர்ந்து நிற்பதற்கு தர்மத்தின் ஊற்றாக நம்முள் விளைந்த வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிந்தனையும், அசைக்க முடியாத சுயக்கட்டுப்பாடுமே காரணம். தர்மம் தவறுபவர்களை அந்தத் தர்மமே காலனாகி அழித்த வரலாற்றை நம் காப்பியங்கள் பறைசாற்றுகின்றன.
2025 ஏப்ரல் 22 அன்று, நம் பாரத மண்ணின் சொர்க்கமான காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், நம் இதயங்களில் ரத்தத்தை வரவழைத்தது. இந்த அநீதியைத் தேசியக் கவி பாரதியார், புரட்சிக் கவி பாரதிதாசன், இளங்கோவடிகள் மற்றும் கம்பர் ஆகியோர் மேலுலகிலிருந்து கண்டால், அவர்களின் உள்ளம் எப்படியெல்லாம் கொதித்திருக்கும்? அவர்களின் எண்ண ஓட்டங்கள் எப்படியிருக்கும்? அந்தப் பெருந்தகைகளின் குரலாகவே இந்த நூலைச் செதுக்கியுள்ளேன்.
தாக்குதல் நடந்த நாள் முதல், இன்று வரை இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், பெண்களின் வீரம், மதங்களுக்குள் கடைபிடிக்கப்பட்ட ஒற்றுமை, சகோதரத்துவம், இந்தியாவின் இராணுவ கட்டமைப்பு, தொலைநோக்கு பார்வை முதலியவற்றை இந்நூல் படம்பிடித்து காட்டும். மேலும், இதற்கு முன்னர் நம் தேசத்தில் நிகழ்ந்த அநீதிகளை நம் முன்னோர்கள் எவ்வாறு எதிர்க்கொண்டனர் என்பதை இளைய தலைமுறையினர் அறியும் வண்ணம் பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம், இரராமயணம் முதலிய காப்பியங்களின் சுருக்கங்களை இதில் இணைத்துள்ளேன். இந்நூல், இன்றைய தலைமுறைக்குத் தர்மத்தையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் வகையில் உரையாடல் வடிவில் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான் பயன்படுத்தியுள்ள செயற்கை நுண்ணறிவு புகைப்படங்கள் உங்கள் கற்பனைக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்று நம்புகிறேன்.
கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டுமல்ல, கிடைத்தற்கரிய இந்த மானிடப் பிறவியை செம்மையாக வாழ்வதற்கே ஆகும். வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நீதி கதைகள் ஒவ்வொரு இந்திய மைந்தரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக நான் எடுத்த ஒரு சிறிய முயற்சியே ‘சிந்தூரத்தின் சக்தி’.
என் தந்தை தெய்வத்திரு. கு. இராஜாராமன் அவர்கள் எனக்கு ஊட்டிய தேசியம் மற்றும் தமிழின் விளைச்சலே இந்த நூல். இதற்கு உறுதுணையாக நின்ற என் கணவர் வி. சத்யபிரகாஷ், என் அருமை மைந்தர்கள் மற்றும் நண்பர்கள்,உறவினார்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
தேசப்பற்று என்பது நாம் கடந்த காலத்திற்குச் செலுத்தும் நன்றி மட்டுமல்ல, வருங்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் பாதுகாப்புக் கவசம். இந்தத் தேசிய ஒருமைப்பாடே நம் குழந்தைகளின் அமைதியான வாழ்விற்கு அஸ்திவாரம்.
திசைகள் எட்டும் நம் தேசத்தின் புகழ் பரவட்டும். வேற்றுமைகள் கடந்து 'பாரத மாதா' என்ற ஒற்றைச் சொல்லில் ஒன்றிணைவோம். நம் ஒவ்வொருவரின் இதயத் துடிப்பிலும் 'வந்தே மாதரம்' என்ற முழக்கம் ஓயாமல் ஒலிக்கட்டும்!