Quotes from காவல் கோட்டம்
புதிய படகைத் தண்ணீரில் இறக்குவதைப்போல கிராமங்கள் ஒவ்வொன்றாய் பெரியாற்று நீரில் இறங்கின. நீரோடு வாழப்பழகுதல் எளிதன்று. நீர் அவர்களுக்குள் இறங்கிப் பாய்ந்து கசிந்தபடி இருந்தது. நீரின் குணம் படியப்படிய மனிதனுக்குள் விளைச்சல் ஆரம்பித்தது. சம்சாரித்தனத்தின் உயிரே நிலத்தில் பயிர் விளையும்பொழுது மனத்துக்குள்ளும் அது விளைவதுதான்; நிலத்தில் பயிர் வாடும்போது மனதுக்குள் உயிர்வாடுவதுதான். நிலத்தின் கண்ணாடியாக மனித உடல் மாறிவிடுகிறது. நிலம் போர்த்திய பேருடலுடன் அலையும் மனிதர்கள் பயிர்களின் வேர்களை நரம்புகளெனத் தங்களுக்குள் ஊடுருவ விட்டுவிடுகின்றனர். பச்சைப் பயிர் வளர்ந்து, பரிய ஆரம்பித்து, பால்பிடித்து, முத்துமுத்தாக விளைந்து வயலிலே சாய்ந்து படுத்துறங்கும் காலத்திற்குள் விதவிதமான மன உணர்வுகளால் உருமாறியபடியே இருக்கின்றனர். பாய்ச்சிய நீரில் விளையும் பயிர் நிலத்தில் மட்டும் விளைவதில்லை. வேளாண்மை எங்கு நடக்கிறது என்பது ஒரு மர்ம விளையாட்டாகவே இருக்கிறது. இயற்கையின் பேரதிசயங்களுக்குள் கால் நனைத்து சம்சாரி வயல்வெளியெங்கும் நடந்து திரிகிறான்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'காவல் கோட்டம்'
எது களவு என்பதை அதிகாரமே தீர்மானிக்கிறது
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'காவல் கோட்டம்'
வீழ்ச்சிக்குப்பின் எவ்வளவு காலம் நிலைத்திருந்தாலும் கோட்டை அதன் அர்த்தத்தை ஓரு சிறு கல்லில் கூட தக்கவைத்துக் கொள்வதில்லை. அது அதனது அர்த்தத்தையும் அவசியத்தையும் ஒருபோதும் தான் தீர்மானிப்பதும் இல்லை. எதிரிகளால் நாற்புறமும் சூழப்பட்ட நிலையில் உட்பகுதியில் இருக்கும் பதற்றத்தையும், பயத்தையும் அது உணர்ந்ததுமில்லை. அவர்களின் பசியை அது அறியாது. முற்றுகையைக் கண்டு அது அஞ்சியதில்லை. வீழ்த்தப்பட்ட பின் சிதைந்துபோன நெடுங்கதவுகளின் வழியே வெட்டுண்ட தேகங்களை இழுத்துக்கொண்டு கரிய இரத்தம் வெளியேறும் போது அதைக் கண்டுகொண்டதுமில்லை. ஏதோ ஒரு மலைப்பகுதியில் இருந்து தன்னைச் செதில் செதிலாக வெட்டி எடுத்து வந்து இங்கே அடுக்கி வைத்தவர்களின் மீது அதற்குக் கோபம் இல்லை; ஆதரவு காட்டவும் தெரியாது. அது வெறும் கல் அவ்வளவுதான். மனிதன் தான் அதன் மீது கனவு காண்கிறான். கட்டியெழுப்புகிறான். ஏதேதோ செய்து அதன் பின்னால் ஒளிந்து கொள்ளப் பார்க்கிறான். செதுக்கி வழிபடுகிறான். நம்பி வரம் பெற விழைகிறான்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'காவல் கோட்டம்'
இது வெறும் கதையல்ல. இதுதான் ஊரின் உயிர். கதை அறுந்து போனால் ஊர் அறுந்து போகும். ஊரும், கதையும் வேறல்ல. ஆதலால், கதையே உயிரென்றானது. கதை மண்ணில் இருந்து முளைக்கின்றது. மண்ணைப் பற்றியே பேசுகின்றது. இந்த மண்ணின் தலைவிளைச்சல் கதைதான்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'காவல் கோட்டம்'
ஆனால் கல் வெறும் கல்லாகவே இருக்கிறது. பறவையின் எச்சத்தில் முளைவிடும் தாவரத்தின் வேர்கள் மட்டுமே அதை உணருகிற ஆற்றல் பெற்றவை. அதனால்தான் விதையிலிருந்து முளைவிடும் முதல் தருணத்திலேயே அது பாறையை வென்றுவிடுகிறது. பதினெட்டு பவுண்டு பீரங்கியின் வாயிலிருந்து பறந்து வந்து அடித்த கல்குண்டுகளைத் தாங்கி கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் கற்பாறங்களின் ஊடே இடி மின்னலைப் போல் இறங்குகிறது ஒரு சிறு வேர்.
சு. வெங்கடேசன் (S. Venkatesan) — 'காவல் கோட்டம்'