Quotes from கங்கை கொண்ட சோழன் பாகம் 2
தொண்டை தேசத்தை விட்டு சோழ தேசம் போகப் போகிறேன். இங்கு இருக்கின்ற நிலங்களை விட்டு அல்லது விற்றுவிட்டு, என் மனைவியோடும், மகளோடும், குடும்பத்திற்கான சில பொருள்களோடும் நான் சோழ தேசம் நோக்கிப் போகப் போகிறேன். மனைவியின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும். மகளின் மானத்தை காப்பாற்ற வேண்டும். அவளை ஒருவனிடம் கை பிடித்து கொடுக்க வேண்டும். மகனை என்னை விட மேம்பட்டவனாக, ஞானமுள்ளவனாக தயார் செய்ய வேண்டும். இதற்காக பொருள் அவசியம். நான் துறவறம் கொள்ள முடியாது. இவளை விட்டு விலக முடியாது. எனவே, இவர்களோடு நிலம் விற்ற சிறிய பொருள்களோடு நான் சோழதேசம் நோக்கி போகப் போகிறேன். மறுபடியும் ஒற்றை புள்ளியிலிருந்து ஆரம்பிக்கப் போகிறேன். சுண்ணத்திலிருந்து மறுபடியும் ஒன்று, இரண்டு என்று போகப் போகிறேன். முடிந்த வரை என்னை ஏதுமில்லாதவனாக வைத்திருக்க முயற்சி செய்யப் போகிறேன். இன்னும் சீரான வாழ்க்கை வாழப்போகிறேன். தொண்டை தேசத்து அந்தணர்களுக்கு சோழ தேசத்தில் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தொண்டை தேசத்து அந்தணர்கள் தஞ்சைக்கு சென்று அங்கு இருந்து ஜெயங்கொண்டத்திற்கு திரும்பிவிட்டார்கள். ஜெயங் கொண்டத்தில் இருக்க எனக்கு விருப்பமில்லை. அது அரசர் இருக்கும் இடம். அரசியல் ரீதியான இடம். இப்பொழுது தஞ்சை அமைதியாகிவிட்டது. மிகப்பெரிய கோவில் இருக்கிறது. தினசரி சிவ தரிசனம். காவேரி வாய்க்கால் குளியல் என்று நான் அமைதியாக இருக்க முயற்சி செய்வேன். அரசருடைய தயவில் மந்திரிமார் சேனாதிபதி தயவில் பெரும் வணிகர் தயவில் என் வாழ்வை துவக்குவேன்.
பாலகுமாரன் (Balakumaran) — 'கங்கை கொண்ட சோழன் பாகம் 2'