Quotes from உலோகம்

நெடுந்தூரம் என்று தோன்றும் பயணம். நொடிநொடியாக ஓர் இரவு. இதயம் காலத்தைவிட வேகமாக ஓடும் அனுபவம். நான் என்ன எண்ணிக்கொண்டிருந்தேன் என்று சொல்வது கஷ்டம். தொடர்பற்ற உதிரி நினைவுகள். அம்மாவின் நினைவு அடிக்கடி வந்து கொண்டிருந்தது அத்துடன் சம்பந்தமில்லாமல் எங்கள் வீட்டுக் கிணறு. அதனுள் ஒரு மாபெரும் மீனின் கண்போல மின்னும் குளிர்ந்த நீர்வட்டம். ஒருவேளை நான் இந்த மண்ணுக்கு மீளவே போவதில்லை. இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த மண்ணை விட்டுவிட்டுப் போவது ஓர் அந்தரங்க கனவு. விரிந்த வெளியுலகம் எங்கோ இருக்கிறது என்றும் அங்கே சென்று சேர்ந்துவிடவேண்டும் என்றும் இங்குள்ள ஒவ்வொரு இளம் மனதும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. இது ஒரு சிறிய தீவாக இருப்பதனால் இருக்கலாம். தீவுகளில் பிறந்தவர்களுக்கெல்லாம் இந்த மனநிலை உண்டா என்ன? இருக்கலாம், பிரிட்டன், ஜப்பான் என சிறிய தீவினரே உலகை வெல்ல கனவு கண்டிருக்கிறார்கள். துணிந்து தங்கள் மண்ணை உதறிவிட்டுக் கிளம்பி கடலோடியிருக்கிறார்கள்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'உலோகம்'