Quotes from கள்வனின் காதலி

யமுனா தீரத்தில் வேணுகானம் செய்து மாடு மேய்த்துத் திரிந்த கண்ணன் திடீரென்று ஒருநாள் மதுரைக்கு ராஜரீகம் நடத்தச் சென்ற பிறகு, பிருந்தாவனத்தில் அவனுடைய தோழர்கள் எல்லாம் துயரக் கடலில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஆனால் ராதை மட்டும் அவ்வாறு துயரப்படவில்லை. அவள் தன் சிநேகிதியிடம் சொல்கிறாள்: "தோழி! ஏன் துயரப்பட வேண்டும்? இந்த உலகத்தில் சாசுவதமானது எதுதான் உண்டு? சகலமும் அநித்யமல்லவா? மனுஷர்கள் அநித்யம்; வாழ்வு அநித்யம்; சுக துக்கங்கள் எல்லாம் அநித்யம்; இது தெரிந்திருக்கும்போது கிருஷ்ணன் போய்விட்டானே என்று நாம் ஏன் வருத்தப்படவேண்டும்? சகியே! இந்த உலகில் நித்யமானது ஒன்றே ஒன்று இருக்கிறது. அது தான் பிரேமை. பிரேமைக்கு உரியவன் கூட அநித்யந்தான்; அவன் போய்விடுவான். ஆனால் பிரேமை மட்டும் ஒரு நாளும் அழியாது. அது நித்யமானது. தோழி! நமது ஹரி பெரிய திருடன் அல்லவா? ஆனால் அவன் கூடத் திருட முடியாத ஒன்று இருக்கிறது. அதுதான் நமது இதயத்திலுள்ள காதல். அவனால் கூட அதைத் திருடிக் கொண்டு போக முடியவில்லையல்லவா? பின் எதற்காக நாம் துக்கப்பட வேண்டும்?
கல்கி (Kalki Krishnamurthy) — 'கள்வனின் காதலி'