Quotes from ஸ்ரீரங்கத்து தேவதைகள்

கோவிந்து ரொம்ப நேரம் மௌனமாக இருந்துவிட்டு போஸ்ட் ஆபீஸ் திறந்ததும் ஒரு கார்டு வாங்கி வந்து, ரங்கு கடையில் உட்கார்ந்து, தொடை மேல் வைத்துக்கொண்டு தினம் கடவுளுக்குக் கடிதம் எழுதுவான். அதுவும் இங்கிலீஷில். அட்ரஸ் - ‘காட். கேர் ஆஃப் வைகுண்டா, ஹெவன்’ என்று எழுதி ‘டியர் காட்’ என்று ஆரம்பித்து மூன்று நான்கு ஆணித்தரமான கேள்விகள் கேட்டிருப்பான். (உதாரணம்) ‘ஏன் இந்த உலகத்தைப் படைத்தாய்; முனிசிபாலிட்டி விளக்கு ஏன் எரியமாட்டேன் என்கிறது? சோனிக்கு எப்போது பேச்சு வரும்?’ கோவிந்து கடிதம் எழுதும் போது ஃபரம் அட்ரஸ் எழுதமாட்டான். அதனால் அவன் தினந்தோறும் எழுதும் கடிதங்கள் எங்கே போய்ச்சேருகின்றன என்று எங்களுக்குத் தகவல் இல்லை. ஒருமுறை சுய அட்ரஸ் எழுதிவிட்டதால், அந்தக் கடிதம் ஶ்ரீ வைகுண்டம் போய், அங்கே ‘அட்ரஸ் ஸ் நாட் ட்ரேஸபிள், ட்ரை ஶ்ரீநகர்’ என்று ஶ்ரீநகர் போய்விட்டு, நாயடிபட்டு மூஞ்சி முழுவதும் முத்திரையாக அவனுக்கே திரும்பி வந்தது. கோவிந்து அதைப் பார்த்து, ஒரே ஒரு தடவை ‘பார்த்தியா? நான் சொன்னேன் பாத்தியா?” என்றான்.
சுஜாதா (Sujatha) — 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்'
அய்யங்கார்களில் இரண்டு பிரிவு உண்டு. வடகலை, தென்கலை. அடைய வளைஞ்சான் பெரியார் கட்சிக்காரர்கள் ‘எச்சக்கலை’ என்று மூன்றாவதையும் சேர்த்துக்கொள்வார்கள். அய்யங்கார் என்பதே ஒருவிதமாகச் சிறுபான்மைதான். தமிழ்நாட்டில் எத்தனை அய்யங்கார்கள் இருக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கணக்கெடுத்ததாகத் தெரியவில்லை. டி.வி.எஸ்., இந்து குடும்பங்களின் அமைப்புகளான தனியார் துறைகளில் சில நாமங்களைப் பார்க்க முடியும். மற்றபடி அய்யங்கார்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வெளியே சிதறியிருக்கிறார்கள்.
சுஜாதா (Sujatha) — 'ஸ்ரீரங்கத்து தேவதைகள்'