இக்கதை இருநாயகர்கள் மற்றும் நாயகிகளை கொண்ட கதை. ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு தாய்நாட்டிற்கு தங்கம் பெற்று தரவேண்டும் என்னும் பெரும் கனவுடன் இருக்கும் சங்கமித்ராவுக்கு அவள் விருப்பமின்றி திருமணம் நடந்துவிடுகிறது. அவள் கணவன் ஜீவானந்தன் அவளது கனவை நனவாக்க உதவினானா? சங்கமித்ரா தங்கம் வென்றாளா? மகப்பேறு மருத்துவராய் சமூக சேவை செய்தாலும் மணவாழ்க்கையில் நத்தையென முடங்கியிருக்கும் மீராவின் மனதை அவளது கணவனான கிருஷ்ணன் வென்றானா? என்பது பற்றிய சுவாரஸ்யமான கதை தான் இது. கதையில் இருந்து சில துளிகள் உங்களுக்காக... ஜீவானந்தன்- சங்கமித்ரா: பொட்டலமாய் உள்ளங்கைக்குள் பொதிந்து கிடக்கும் தூக்க மாத்திரையை இறுகப் பற்றி கை மூடி ஒரு வித விரைப்புத் தன்மையுடன் சங்கமித்ரா நிற்க, மெத்தென இருக்கும் கன்னம் வருடி, "மாமாகிட்ட என்ன பயம்? நான் உன்னவன்! உன்னில் பாதி!" காதோரம் உதடுகள் உரச சொல்ல, இன்னும் ஒரு அடி பின்னே நகர்ந்து, கதவோடு பல்லியாய் ஒட்டிக் கொண்டவளின் இடை சுற்றி ஒற்றைக் கரம் படரவிட்டவன், அவளை முன்னே இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டு மறுகரத்தால் அவளுக்குப் பின் இருக்கும் கதவின் தாழ்ப்பாளை போட்டான். அவன் மார்பில் பொதிந்து கிடந்தவளின் கன்னத்தில் உராய்ந்த பட்டுச்சட்டை கூச்சமூட்ட, பட்டென விலக எத்தனிக்க, "ம்ஹூம், நீ என்னவள்... எண்ணில் பாதி இனி காத்திருக்கவோ, விலகி நிற்கவோ முடியாது" என உச்சி முகர்ந்தான். "இந்த நாளுக்காக எத்தனை ஆண்டுகளாய் காத்திருக்கிறேன் தெரியுமா?" என மூக்கோடு மூக்கை உரச, பூங்கரம் கொண்டு முகம் மூடிக் கொண்டாள். "இன்னும் எவ்வளவு நேரத்திற்கு தான் அங்கேயே நிற்பதாய் உத்தேசம்?" எனும் கணீர் குரலில் திடுக்கிட்டது மித்ரா மட்டுமல்ல காதல் தேவதையும் தான். 'அடப்பாவி, என்னையே கனவு காண வச்சுட்டியே!' என நொந்து போன காதல் தேவதை கதவருகிலேயே அமர்ந்துவிட்டது. "நடக்கத் தெரியுமா இல்ல தூக்கிட்டு வரணுமா?" ஜீவா கண்கள் சிரிக்க கேட்டான். 'திமிர் தான் உனக்கு! இரு, கதறிக்கிட்டு ஓட விடுறேன்’ என அவனருகே வந்தவள் என்ன செய்திருப்பாள் என கதையை படித்து தெரிந்துகொள்ளுங்கள். கிருஷ்ணன்- மீரா : "உனக்கு என்ன தான் பிரச்சனை? கல்யாணத்துக்கு முன்ன என் மனசை புரிஞ்சுக்காம வேதனைப்படுத்தின, இப்போ தான் நீ கேட்ட தாலியை கொடுத்தாச்சே இன்னும் ஏன் விலகி விலகிப் போற?" கட்டுக்கடங்கா கோபத்தில் இருந்தாலும் குரல் உயர்த்தாது சீறினான். "நான் எங்க விலகிப் போனேன்?" புரியா குழந்தையாய் திருத்திருக்க, "ஆசையா கட்டிபிடிச்சா இறுகி நிக்கிற, மடியில உட்கார வச்சுக்கிட்டா வேண்டா வெறுப்பா இருக்க, லிப்லாக் பண்ணினா எப்போ முடியும்ங்கிற மாதிரி பார்க்கிற, இப்போ ஸ்கூட்டி வாங்கிக் தரேன்னு சொல்றேன் எனக்காக நீ காசு செலவு பண்ண வேண்டியதில்லைன்னு சொல்ற. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? உன் மனசில் என்ன தான் இருக்கு? என்னோட ஒட்டுதலா குடும்பம் பண்ணக் கூடாதுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கியா? என்ன கருமமோ தெரியலை, உன்னை பார்த்ததுமே பிடிச்சு போச்சு. எனக்கானவ நீ தான்னு ஆசை ஆசையா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உனக்கு அந்த மாதிரி ஒரு பீலிங்ஸும் இல்லைன்னு உன் நடத்தையே காட்டிக் கொடுக்குது. என்னை பிடிக்காம, உன் குடும்பத்தார் தொந்தரவு தாங்காம தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதம் சொன்ன, சொல்லுடி?" மீரா என்ன சொல்லியிருப்பாள் எனபதை தெரிந்துகொள்ள கதையை படியுங்கள்.